காவிரி: தமிழ்நாட்டுக்கு எதிராக செப்.29-ல் 'கர்நாடகா பந்த்'- நாளை பெங்களூர் முழு அடைப்பு- பதற்றம்
பெங்களூர்: காவிரி நதிநீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டம் வரும் 29-ந் தேதி நடைபெறும் என கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. காவிரி பிரச்சனையில் பெங்களூர் பந்த் நாளை நடைபெற உள்ளது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. தமிழ்நாட்டுக்கு 24,000 கன அடி கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.

காவிரி போராட்டம்: இதனடிப்படையில் காவிரியில் சொற்பமான நீரை கர்நாடகா திறந்துவிட்டு வருகிறது. இதற்கு கூட கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் மண்டியா மாவட்டமே போர்க்களமாக காட்சி தருகிறது. மண்டியாவில் முதலில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெங்களூர் நகரில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.
பெங்களூர் முழு அடைப்பு: பெங்களூர் முழு அடைப்புப் போராட்டத்துக்கு 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கர்நாடகா அரசு பேருந்து ஓட்டுநர்களும் முழு அடைப்பில் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர். பெங்களூர் ஐடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1991 தமிழர் மீது தாக்குதல்: பெங்களூரில் தமிழர் வாழும் பகுதிகளில் இந்த முழு அடைப்பு அறிவிப்பால் பெரும் பதற்றம் நிலவுகிறது. 1991-ல் காவிரி பிரச்சனையில் லட்சக்கணக்கான கர்நாடகா வாழ் தமிழர்கள் பெரும் துயரை எதிர்கொண்டு அகதிகளாக தமிழ்நாட்டுக்கு விரட்டி அடிக்கப்பட்ட பேரவலம் நிகழ்ந்தது. தமிழ்நாட்டு தமிழர்களின் சொத்துகளை கன்னட அமைப்புகள் தீக்கிரையாக்கின; சூறையாடின. இதனால் பெங்களூர் முழு அடைப்பு தமிழர் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் வாட்டாள் நாகராஜ் போராட்டம்: இதனிடையே வரும் 29-ந் தேதி கர்நாடகா தழுவிய முழு அடைப்பு போராட்டம்- கர்நாடகா பந்த் நடத்தப்படும் என கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பெங்களூரில் மைசூரு வங்கி சர்க்கிளில் கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

செப்டம்பர் 29-ல் கர்நாடகா பந்த்: பெங்களூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய வட்டாள் நாகராஜ், பெங்களூர் முழு அடைப்புப் போராட்டம் நாளை நடைபெறட்டும். அதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் கர்நாடகா தழுவிய முழு அடைப்புதான் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதனால் வரும் 29-ந் தேதி கர்நாடகா தழுவிய முழு அடைப்பு போராட்டம் - கர்நாடகா பந்த் நடத்தப்படும். கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம். காவிரி, மேகதாது, மகதாயி பிரச்சனைகளுக்கு கடந்த காலங்களில் கன்னட சங்கங்களில் பந்த் நடத்தி உள்ளோம். மொத்தம் 15 முழு அடைப்புப் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியது போலவே 29-ந் தேதி கர்நாடகா பந்த் முழு அளவில் நடத்தப்படும் என்றார்.
பெங்களூர் முழு அடைப்புக்கு எதிர்ப்பு: இதனிடையே பெங்களூர் முழு அடைப்புப் போராட்டத்துக்கு கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் பிரவீண் ஷெட்டி கோஷ்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெங்களூர் முழு அடைப்புப் போராட்டத்தை கைவிட்டுவிட்டு கர்நாடகா பந்த் நடத்தப்பட வேண்டும். செப்டம்பர் 29-ந் தேதி முழு அடைப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அந்த கோஷ்டி கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications