ரூ139.35 கோடி ஊழல்: 5-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை
ராஞ்சி: 5-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் லாலு பிரசாத் யாதவுக்கு ரூ60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தில் 1991-ம் ஆண்டு 1996-ம் ஆண்டு முதல்வராக இருந்தார் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ். லாலு ஆட்சிக் காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக அரசு கருவூலங்களில் இருந்து ரூ950 கோடி பணம் மோசடியாக பெறப்பட்டது என்பது வழக்கு.
இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டன. இதுவரை 4 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

5-வது வழக்கில் 5 ஆண்டு சிறை
கடந்த வாரம் 5-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம். இந்நிலையில் இன்று லாலு பிரசாத் யாதவுக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ60 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

வழக்கு விவரம்
பீகார் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்தின் டோரண்டா கருவூலத்தில் லாலு ஆட்சிக் காலத்தில் ரூ139.35 கோடி பணம் மோசடி செய்யப்பட்டது தொடர்பான 5-வது வழக்கு. இதில் மொத்தம் 168 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவர்களில் 55 பேர் மரணம் அடைந்துவிட்டனர். 7 பேர் அரசு தரப்பு சாட்சிகளாகினர். 2 பேர் அப்ரூவராகினர். மேலும் 6 பேர் தொடர்ந்து தலைமறைவாகி உள்ளனர்.

75 பேர் குற்றவாளிகள்
இதில் லாலு பிரசாத் உட்பட 75 பேர் குற்றவாளிகள் என சிபிஐ நீதிமன்றம் கடந்த வாரம் உறுதி செய்தது. மேலும் 24 பேர் விடுதலை செய்யப்பட்டனர். லாலு மீதான இந்த 5-வது ஊழல் வழக்கில் ஏற்கனவே 35 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. லாலு உள்ளிட்டோருக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜாமீன்
முன்னதாக 4 ஊழல் வழக்குகளிலும் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ் 2017-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். லாலு பிரசாத் யாதவின் உடல்நிலையை காரணம் காட்டி கடந்த ஆண்டு ஏப்ரலில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து சிறையில் இருந்து விடுதலையான லாலு பிரசாத் டெல்லியில் தங்கி இருந்தார்.












Click it and Unblock the Notifications