'வியாபம்' ஊழல்... முதற்கட்டமாக 29 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு
டெல்லி : மத்திய பிரதேச மாநிலத்தை உலுக்கிய தேர்வு வாரிய முறைகேடு தொடர்பாக விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ., தனது முதற்கட்ட விசாரணையின் முடிவில் 29 பேர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.
"வியாபம்" எனப்படும் மத்திய பிரதேச அரசின் தொழில் தேர்வு வாரிய ஊழல், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், சாட்சிகள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்து வரும் நிலையில், இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனையடுத்து "வியாபம்" ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. இணை இயக்குனர் அளவில் உள்ள அதிகாரி தலைமையில் 40 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் போபால் சென்று "வியாபம்" தொடர்பான விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில், 2010 ஆம் ஆண்டு நடந்த தேர்வு தொடர்பான வழக்கில் முதற்கட்டமாக 21 பேர் மீது மோசடி, ஏமாற்றுதல் மற்றும் குற்ற சதி ஆகிய பிரிவுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், 2011 ஆம் ஆணடு நடைபெற்ற தேர்வில் தொடர்புடைய மற்றொரு வழக்கில் 8 நபர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.