2ஜி வழக்கில்.. ரூ. 30,000 கோடி அளவுக்குத்தான் இழப்பு.. சிபிஐ வைத்த குற்றச்சாட்டு இதுதான்!
2ஜி வழக்கில் ஊழல் தொகை ரூ. 1.76 லட்சம் என்று வினோத் ராய் கூறியிருந்தாலும் 30,000 கோடி ரூபாய் மட்டுமே என்று சி.பி.ஐ கூறியிருந்தது.
Recommended Video
டெல்லி : 2ஜி அலைக்கற்றை வழக்கின் ஊழல் தொகை 30,000 கோடி ரூபாய்தான் என்று சி.பி.ஐ தரப்பில் குற்றச் சாட்டு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் தற்போது சிபிஐ கோர்ட் நிராகரித்து விட்டது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்து இருந்தது. மேலும், 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ ரூபாய் 30,000 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்து இருந்தது. இதுகுறித்து இந்த வழக்கை விசாரித்த முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ஏ.பி.சிங் தாக்கல் செய்த அறிக்கையில், 1.76 லட்சம் கோடி என்று சி.ஏ.ஜி தாக்கல் செய்தது உத்தேசமான அறிக்கை என்று தெரிவித்து இருந்தார்.
2ஜி வழக்கில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை அலைக்கற்றை அனுமதிக்கு ஏலத்தின் மூலமாக 2001ம் ஆண்டு கொடுக்கப்பட்ட விலையையும், 2007ம் ஆண்டு கொடுக்கப்பட்ட விலையையும் ஒப்பிட்டு பார்க்கும்போது 30,000 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.
மேலும், இந்த வழக்கில் ஸ்வான் மற்றும் யுனிடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு அமைச்சராக இருந்த ஆ.ராசா ஆதரவாக செயல்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது மட்டுமில்லாமல் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோதும் அந்த இரு நிறுவனங்களுக்கும் பல்வேறு உதவிகளை ராசா செய்து கொடுத்து இருப்பதாக சி.பி.ஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பை இன்று டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்தார். அதில் சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த குற்றச்சாட்டு பொய் என்றும், அதை சி.பி.ஐ தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது என்றும் அறிவித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.