ரூ.100 கோடி மதிப்பீட்டில் 5,000 அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா... டெல்லியில்!
டெல்லி: பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் டெல்லியில் அரசு பேருந்துகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்த ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, முதல்கட்டமாக 5 ஆயிரம் அரசு பேருந்துகளில் ரூ. 100 கோடி மதிப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட உள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப் பட்டார். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்த சம்பவம்.
அதனைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி, ஏற்கனவே சில மாநில ரயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.
கண்காணிப்பு கேமரா...
இந்நிலையில், முதற்கட்டமாக டெல்லி அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் (டிடீசி) 100 கோடி செலவில் 5,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கான நிதி, வரும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி பேருந்துகள்...
இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், ‘டெல்லி போக்குவரத்துக் கழகம் சார்பில் 4,700 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 924 ஸ்டாண்டர்டு ரக பேருந்துகளின் (எல்லோ) ஆயுட்காலம் முடிந்து விட்டது. இதுத விர ஒருங்கிணைந்த பல்முனை போக்குவரத்து மாதிரி அமைப்பு (டிஐ எம் டி எஸ்) சார் பில் 1,300 கிளஸ்டர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் இந்தப் பேருந்துகளில் ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர்.
தலா 3 கேமராக்கள்...
பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 5,000 டிடீசி மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்திலும் தலா 3 கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு...
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதன் மூலம், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும். டெல்லி போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து தாழ்தள பேருந்துகள் மற்றும் ஏசி பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
ரூ. 100 கோடி பட்ஜெட்...
மேலும் 1,300 கிளஸ்டர் பேருந்துகளும் (ஆரஞ்ச்) இத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன. இத்திட்டத்துக்காக வரும் பட்ஜெட்டில் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
பாதுகாவலர்கள்...
இதே போல் தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்ட 5,000 பாதுகாவலர்கள் (மார் ஷல்ஸ்) பேருந்துகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தற்போது ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நிதி ஒதுக்கீடு...
விரைவில் அவர்கள் பணியமர்த்தப்படுவர். இது போன்ற பாதுகாவலர்களுக்காக தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.