காவிரி : திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை தாக்கல் செய்தது மத்திய அரசு... வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது.
Recommended Video
டெல்லி: காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் வரைவு திட்டம் தயாரிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கர்நாடக தேர்தல் பணிகளில் அமைச்சர்கள் ஈடுபட்டிருந்ததால் வரைவு திட்டம் அமைக்க காலஅவகாசம் கோரியது.
இதைத் தொடர்ந்து அந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசும் கர்நாடகா அரசும் ஒப்புக் கொண்டது.
மத்திய அரசு தலையிட கூடாது
அதன்படி வரைவு திட்டத்தில் அமைப்பு என்ற பெயரை காவிரி மேலாண்மை வாரியம் என மத்திய அரசின் வரைவு திட்டத்தை திருத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர் பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம்தான் தீர்மானிக்கும். இதில் மத்திய அரசு தலையிட கூடாது.
டெல்லியில் அமைக்க வேண்டும்
எந்த மாநிலத்துக்கு எவ்வளவு நீர் திறந்து விடுவது உள்ளிட்டவை குறித்தும் வாரியமே முடிவு செய்ய வேண்டும். அதுபோல் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான தலைமையிடம் பெங்களூரில் அமைக்கக் கூடாது, டெல்லியிலேயே அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் நிராகரிப்பு
கர்நாடகத்தில் இன்னும் எந்த அரசும் பொறுப்பேற்காததால் காவிரி வழக்கை ஒத்திவைக்க கர்நாடகா வலியுறுத்தியது. ஆனால் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
வரைவு திட்டம்
மேலாண்மை வாரியம் அனுமதி இல்லாமல் கர்நாடகாவோ தமிழகமோ அணை, தடுப்பணை கட்ட கூடாது. மேலாண்மை வாரியத்துக்கே அதிகாரத்தை தர வேண்டும். திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை இன்றே தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு
அதன்படி இன்று உச்சநீதிமன்றத்தில் திருத்தியமைக்கப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் இன்று சமர்ப்பித்தார். இந்த நிலையில் திருத்தப்பட்ட வரைவு திட்டம் மீதான தீர்ப்பு நாளை மாலை 4 மணிக்கு வெளியாகிறது. நாளை வழங்காவிட்டால் வரும் 22, 23 தேதிகளில் தீர்ப்பு வெளியாகும் என உச்சநீதிமன்றம் தகவல் அளித்துள்ளது.