அப்பாடா.. ஜல்லிக்கட்டு தொடர்பான 2 அறிவிக்கைகளை வாபஸ் பெற்றது மத்திய அரசு!
ஜல்லிக்கட்டு தொடர்பான 2 அறிவிக்கைகளை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் ஜல்லிக்கட்டு நடத்த இனி தடை ஏதும் இருக்காது என கூறப்படுகிறது.
டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பாக 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு வெளியிட்ட 2 அறிவிக்கைகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான மனு நாளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி நடைபெற்ற போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியதையடுத்து டெல்லி விரைந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசரச்சட்டம் இயற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை ஜல்லிக்கட்டுக்க அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசரச்சட்டம் நேற்று தமிழக சட்டசபையில் சட்டமாக்கப்பட்டது.
இந்நிலையில் 2011 மற்றும 2016ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட 2 அறிக்கைகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதாவது 2011ஆம் ஆண்ட காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டு அப்போதைய மத்திய அரசால் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதனால் ஜல்லிக்கட்டுக்கு காளைகளை பயன்படுத்த முடியாமல் போனது. எனவே, தமிழக கோரிக்கையை ஏற்று 2016ஆம் ஆண்டு பாரம்பரிய கலாச்சார விழாவாக ஜல்லிக்கட்டை நடத்தலாம் என கூறி மத்திய அரசு ஒரு அறிவிக்கை வெளியிட்டிருந்தது. இந்த அறிவிக்கையை எதிர்த்து பீட்டா போன்ற அமைப்புகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் இந்த 2 அறிவிக்கைகளையும் தற்போது திரும்பப்பெறுவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான மனு நாளை தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் ஜல்லிக்கட்டு நடத்த இனி எந்த தடையும் இருக்காது என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications