சேது சமுத்திர திட்டம்: வழக்கு விசாரணை நவம்பர் மாதம் ஒத்திவைப்பு
டெல்லி: சேது சமுத்திர திட்டத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி மத்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் மாதத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தால் ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது எனக் கூறி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு தொடரப்பட்டது. சுப்ரமணியன்சுவாசி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தன.
அதற்கு பதில் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், சேது சமுத்திர திட்டம் தொடர்பாக, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்தது.
அதில், திட்டமிட்டபடி சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. திட்டத்திற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவிற்கு பதிலளிக்க, வழக்கை தொடர்ந்தவர்களில் ஒருவரான சுப்ரமணியசுவாமி கால அவகாசம் கோரியதால், விசாரணையை வருகிற நவம்பர் மாதம் இறுதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.