ரூபாய் நோட்டு தடைக்கு எதிரான வழக்கில் 15ம் தேதி விசாரணை! மத்திய அரசு அவசர கேவியட் மனு தாக்கல்
டெல்லி: ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பிக்கும் முன்பாக அதுகுறித்து மத்திய அரசின் கருத்தை கேட்க வேண்டும் என்று மத்திய அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கால அவகாசம் எதுவும் அளிக்காமல் திடீரென நள்ளிரவு முதலே இந்த நடைமுறை அமலுக்கு வந்ததால், நாடு முழுவதும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். இந்த அறிவிப்புக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சங்கர்லால் பாண்டே மற்றும் விவேக் நாராயண் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதனை செயல்படுத்த கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும். எனவே, எனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த மனு இன்று சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட் வரும் 15ம் தேதி, செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது. இதனிடையே மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு உத்தரவு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஏதாவது உத்தரவு பிறப்பித்தால், முன்னதாக மத்திய அரசிடம் கருத்து கேட்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்தால், மக்களுக்கு குழப்பம் ஏற்படும் என்பதால் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications