அரசியல் வன்முறைகள் நீடிப்பு- மே.வங்க மமதா அரசு டிஸ்மிஸ்?
கொல்கத்தா: அரசியல் வன்முறைகள் தொடர்ந்து நீடிப்பதால் மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான ஆட்சியை மத்திய அரசு கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலின் போது அதிக வன்முறைகள் நடந்த மாநிலமாக இருந்தது மேற்கு வங்கம். லோக்சபா தேர்தல் முடிந்த பின்னரும் வன்முறைகள் ஓய்ந்தபாடில்லை.
அண்மையில் பாஜக தொண்டர்கள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

பாஜக கொந்தளிப்பு
மேலும் உயிரிழந்த தொண்டர்களின் உடல்களை பாஜக தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இது பாஜகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமித்ஷாவுடன் ஆளுநர் சந்திப்பு
இந்நிலையில் டெல்லி சென்ற மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது மேற்கு வங்க நிலவரம் குறித்து அமித்ஷாவிடம் அவர் விவரித்தார்.

ஜனாதிபதியுடன் ஆலோசனை
பின்னர் பிரதமர் மோடியுடனும் கேசரிநாத் ஆலோசனை நடத்திவிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்தார். இச்சந்திப்புகளைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் மமதா அரசு கலைக்கப்படலாம் என தகவல் பரவியது.

மமதா ஆட்சி டிஸ்மிஸ்?
மமதா ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அங்கு நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கு வங்க பாஜக பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்ஜியாவும் கருத்து தெரிவித்திருந்தார்.

பாஜக பொறுப்பாளர் எச்சரிக்கை
இது தொடர்பாக அவர் கூறுகையில், மேற்கு வங்க அரசானது துப்பாக்கிகளாலும் தோட்டாக்களாலும் நடத்தப்பட்டு வருகிறது. இதே நிலைமை நீடித்தால் மேற்கு வங்க விவகாரத்தில் மத்திய அரசு தலையிட நேரிடும். தேவைப்பட்டால் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவின் கீழ் ஆட்சி கலைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படலாம் என கூறியிருந்தார். இதனால் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications