இப்படி பண்றீங்களே ஜெகன் அண்ணா.. ஒட்டுமொத்த சந்திரபாபு நாயுடு குடும்பமும் நாளை சோறு தண்ணி மறுப்பு!
விஜயவாடா: ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திரா முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு நாளை சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளார்.
ஆந்திரா மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சி இடையேதான் பிரதான போட்டி.

சந்திரபாபு கைது- சிறையில் அடைப்பு: இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவை கைது செய்து ஊழல் வழக்கில் சிறையில் அடைத்துள்ளார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. இன்னமும் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அவரைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷும் சிறைக்குப் போகக் கூடும். சந்திரபாபு நாயுடுவை சிக்க வைத்த அதே ஊழல் வழக்கில் நாரா லோகேஷுக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 4-ந் தேதி நடைபெற உள்ளது.
சந்திரபாபுவும் குடும்பமும் உண்ணாவிரதம்: இந்நிலையில் தம்மை கைது செய்ததைக் கண்டித்து காந்தி ஜெயந்தியான நாளை அக்டோபர் 2-ந் தேதி ராஜமுந்திரி சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார் சந்திரபாபு நாயுடு. அவருக்கு ஆதரவு தெரிவித்து மனைவியும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்.
ஒட்டுமொத்த கட்சியினர் போராட்டம்: இதனால் தெலுங்குதேசம் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜனசேனா ஆகிய இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் ஆந்திரா முழுவதும் நாளை ஒருநாள் பட்டினி போராட்டம் நடத்த உள்ளனர். சிறையில் அடைத்த ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக தமது சிறைவாசத்தை ஆயுதமாக சந்திரபாபு பயன்படுத்துவது ஆந்திரா அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
என்ன ஊழல்?: சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாட்டு திட்டம், ரிங் ரோடு சீரமைப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. இதில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.371 கோடி ஊழல் முறைகேடு நிகழ்ந்துள்ளது என்பதுதான் அடிப்படை புகார். இந்த வழக்கில் மொத்த்தம் 26 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 10 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications