பாஜகவுடன் கூட்டணி தொடரும்.. அரசியல் பரபரப்புக்கு பிரேக் விட்ட சந்திரபாபு நாயுடு
பாரதிய ஜனதாவுடன் கூட்டணி தொடரும் என ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்
அமராவதி: ஆந்திர முதல் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி தொடரும் என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்
பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு என்று எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை, மாநில அரசிடம் மத்திய அரசு விரோத போக்கு என்பதால் விரைவில் பாஜக கூட்டணியிலிருந்து தெலுங்குதேச கட்சி வெளியேறும் என கடந்த சில நாட்களாக பேசப்பட்டது. இந்நிலையில் கூட்டணியிலிருந்து வெளியேறப்போவதில்லை என சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

அமராவதியில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, மத்திய அரசுடன் பிரச்சினை ஏற்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. மாநில நலனே முக்கியம். பா.ஜனதாவுடனான கூட்டணியை மக்கள் விரும்பாத நிலைமை வரும் போது உறவை முறித்து கொள்வது குறித்து முடிவு எடுக்கலாம் என்றார்.
மக்களின் நாடியை சரியான நேரத்தில் கண்டுபிடித்து அதன் அடிப்படையில் முன்னுக்கு செல்கிறவர்களால் தான் அரசியலில் வெற்றி பெற முடியும். எனவே இப்போதைக்கு கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டாம். இந்த விவகாரத்தில் தீவிரமான ஆலோசனைக்கு பிறகே முடிவு எடுக்க முடியும். பா.ஜனதாவுடன் ஆன உறவு குறித்து ஆலோசிக்க அமைச்சரவை மற்றும் எம்.பி.க்கள் கூட்டத்துக்கு பிறகே முடிவு எடுக்கப்படும் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும் பா.ஜனதாவை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது என்றும் சந்திரபாபு நாயுடு கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications