உலக முதலீட்டாளர் மாநாட்டில் உணவுக்கு அடிதடி! பிரதமர் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் வெடித்த களேபரம்!
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு நடைபெற்ற நிலையில், இதனைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவிட்டார். இதற்கிடையே இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் உணவுக்காக அடித்துக் கொண்ட வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
நமது நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களும் இப்போது முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாகச் சர்வதேச அளவில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு மாநிலங்களும் முயன்று வருகிறது.

முதலீட்டாளர்கள் மாநாடு
இதற்காக பல்வேறு மாநிலங்களும் முதலீட்டாளர்கள் மாநாட்டையும் நடத்தி வருகின்றன. பொதுவாக இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் பல்வேறு தொழிலதிபர்கள் பங்கேற்பார்கள். முதலீடு தொடர்பாகப் பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். அதன்படி தான் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் ஒரு முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் உணவுக்காக அடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த பிப்ரவரி 25ம் தேதி போபாலில் நடைபெற்ற மத்தியப் பிரதேச உலக முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் தான் இந்த குழப்பம் ஏற்பட்டது. அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த மாநாட்டில் உணவு தட்டுகளுக்காக பெரும் கூட்டமே சண்டையிடும் வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
மோடி & அமித் ஷா
இந்த மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 30.77 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த மாநாட்டின் நிறைவுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "2027ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும், 2047ஆம் ஆண்டுக்குள் நமது நாட்டை வளர்ந்த நாடாகவும் மாற்றத் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் மத்தியப் பிரதேச அரசு நடத்தும் இந்த உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு முக்கியப் பங்கு வகிக்கும்" என்றார்.
உணவுக்கு அடிதடி
வெகு சிறப்பாக இந்த இரு நாள் மாநாடு நடந்து முடிந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இந்த மாநாட்டில் தான் உணவுக்காக ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட வீடியோவும் இணையத்தில் டிரெண்டானது. தட்டுகளைப் பிடுங்கிக்கொண்டும் அடித்துக் கொண்டுள்ளனர். மேலும், பூரி மற்றும் சப்ஜிக்கு தனி வரிசை இருந்த நிலையில், அந்த வரிசையில் நிற்காமல் சிலர் சென்றதால் அங்கும் குழப்பம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த குழப்பத்தால் அங்கு உணவு வழங்கும் இடத்தில் பெரியளவில் சேதமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
MP Global Investors Summit or
— Newton Bank Kumar (@idesibanda) February 26, 2025
PM Gareeb Kalyan Anna Yojna 😂 pic.twitter.com/c4V1INYLQS
நெட்டிசன்கள் ஆவேசம்
நிகழ்ச்சியை நடத்தியவர்கள் உரிய முறையில் திட்டமிடவில்லை என்றும் அதுவே இந்த சம்பவத்திற்குக் காரணம் எனச் சிலர் சொல்கிறார்கள். நாட்டின் பல டாப் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்ற நிகழ்வில் இதுபோல நடப்பதை ஏற்க முடியாது என்றும் சரியான திட்டமிடல் அவசியம் என்றும் பலரும் சாடி வருகிறார்கள். அதேநேரம் இன்னும் சிலர் உணவு ரெடியாக சற்று தாமதம் ஏற்பட்டதாகவும் அதற்குள் விரக்தி அடைந்து சிலர் இதுபோல செய்ததாகவும் கூறி வருகிறார்கள்.
நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து மத்திய பிரதேச அரசை நக்கலடித்தும் வருகிறார்கள். இதுவரை எந்தவொரு முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் இதுபோல ஒரு விஷயத்தைப் பார்த்து இருக்கவே மாட்டீர்கள் என்று கிண்டல் செய்து வருகிறார்கள். முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற போலி முதலீட்டாளர்களே இதுபோல அடித்துக் கொண்டதாகவும் சிலர் திட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications