10 நாளில் 2வது முறையாக வினாத்தாள் லீக்.. கர்நாடக பிளஸ் டூ கெமிஸ்ட்ரி பொதுத்தேர்வு மீண்டும் ரத்து
பெங்களூர்: வினாத்தாள் கசிந்ததால் ரத்து செய்து இன்று நடத்தப்பட்ட கர்நாடக 12ம் வகுப்பு வேதியியல் பொதுத்தேர்வில் மீண்டும் வினாத்தாள் கசிந்த சர்ச்சை வெடித்தது. இதையடுத்து மீண்டும் தேர்வு ஏப்ரல் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் பொறுப்பற்ற செயலை கண்டித்து மாணவர்களும், பெற்றோரும், போராட்டங்களில் குதித்துள்ளனர்.
கர்நாடகாவில் தற்போது பிளஸ் டூ (பியூசி-2வது ஆண்டு) பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. கடந்த 21ம் தேதி வேதியியல் தேர்வு நடைபெறுவதாக இருந்த நிலையில், கேள்வித்தாள் அவுட் ஆனது. இதையடுத்து வேதியியல் தேர்வு மார்ச் 31ம் தேதியான இன்றுக்கு, ஒத்தி வைக்கப்பட்டது.
Hubli (Karnataka): Students protest over repeated 12th standard question paper leak pic.twitter.com/zrg8jmUfdT
— ANI (@ANI_news) March 31, 2016
இன்று தேர்வு நடைபெறும் என நம்பி மீண்டும் தேர்வுக்கு தயாராகி வந்தனர், மாணவ, மாணவிகள். இந்நிலையில், மீண்டும் கேள்வித்தாள் லீக் ஆகியுள்ள தகவலை சிஐடி போலீசார் கண்டுபிடித்தனர். அதிகாலை 3.30 மணியளவில், இந்த தகவலை சிஐடி போலீசார், மேல்நிலை கல்வி வாரியத்திடம் தெரிவித்தனர்.
சிஐடி போலீசார் குறிப்பிட்ட கேள்விகளும், ஒரிஜினல் கேள்வித்தாளில் இருந்த கேள்விகளும் ஒன்றுதான் என்பதை ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்த தேர்வு வாரியம், தேர்வை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. இதனால் வேதியியல் தேர்வு எழுதவிருந்த சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக அரசின் கையாலாகத தனத்தை இது காட்டுவதாக குற்றம்சாட்டி, மாணவர்களின் பெற்றோரும், மாணவர்களும், மாணவர் அமைப்புகளும் பெங்களூரில் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனிடையே ஏப்ரல் 12ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
கேள்வித்தாள் லீக் ஆகும் சம்பவத்திற்கு பொறுப்பேற்று, கல்வித்துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் பதவி விலக வேண்டும் என்று சட்டசபையில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்து தர்ணா நடத்தின. ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் சிலரும் இந்த விஷயத்தில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.