Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரு குண்டுவெடிப்புக்கு காரணம் அல் உம்மா இயக்கமா? சிமியா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு அல் உம்மா அல்லது சிமி தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் பெங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு சர்ச் சாலையில் நேற்று இரவு குண்டுவெடித்ததில் சென்னையைச் சேர்ந்த பவானி என்ற பெண் பலியானார். மேலும் மூவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு யார் காரணம்? எந்த அமைப்பு இத்தாக்குதலை நடத்தியது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Chennai bombers behind bangalore blast?

அல் உம்மா?

தமிழ்நாட்டை தளமாக செயல்படும் அமைப்பு அல் உம்மா. பாபர் மசூதி இடிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அமைப்பு தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது. கோயம்புத்தூர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசால் அல் உம்மா அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது.

அல் உம்மா அமைப்பானது இந்து மதத் தலைவர்களை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தி வந்தது. சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வெளியே தாக்குதல் நடத்தி 11 பேரை படுகொலை செய்தது அல் உம்மாவின் மிகப் பெரிய முதலாவது தாக்குதலாகும்.

1993 ஆம் ஆண்டு பாஷாவால் உருவாக்கப்பட்டதுதான் அல் உம்மா இயக்கம். இந்த அமைப்புதான் அத்வானியை இலக்கு வைத்து 1998-ல் கோயம்புத்தூரில் தாக்குதல் நடத்தியது. ஆனால் அத்வானி தாமதமாக வந்ததால் அவர் அன்று உயிர் தப்பினார்.

2013 ஆம் ஆண்டு பெங்களூர் பா.ஜ.க. அலுவலகத்துக்கு வெளியே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான அல் உம்மாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். பாஜகவுக்கு எச்சரிக்கை விடுக்கவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இருவரும் கூறியிருந்தனர்.

தற்போது பெங்களூர் சர்ச் சாலையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பும் கூட பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினருக்கான எச்சரிக்கையாக அல் உம்மாவினால் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு தனிப்படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அல் உம்மா அமைப்பு வலிமையானதாக இல்லாமல் இருந்தாலும் இதுபோன்ற சிறிய தாக்குதல்களை ஸ்லீப்பர் செல்கள் மூலம் அல் உம்மா இயக்கம் நிகழ்த்தியிருக்க சாத்தியம் இருக்கிறது என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

சிமி தீவிரவாதிகளா?

ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு தொடர்பில்லை என்கிற போது இஸ்லாமிய மாணவர் இயக்கமான சிமி மீது சந்தேகம் வலுக்கிறது. சிமி இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்ட பின்னர் பல்வேறு குழுக்களாக இந்த இயக்கம் பிரிந்துள்ளது. சிலர் இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் தனியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

கடந்தாண்டு மத்தியப் பிரதேச சிறையில் இருந்து தப்பியோடிய சிமி அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அண்மையில் மூன்று முறை எச்சரிக்கை விடுத்திருந்தது. போலீசாரைக் கொலை செய்தது, கொலை முயற்சிகள், வங்கிக் கொள்ளைகள், மதங்களிடையே பதற்றத்தைத் தூண்டியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் "சிமி' இயக்கத்தைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் கடந்த 2011ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

மத்தியப் பிரதேசத்தின் கண்ட்வா நகரச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு தப்பி ஓடினர். அஜாஜூதீன் முகமது, ஜாகிர் உசேன்,. மெக்பூப், அயூப் கான், அம்ஜத் ரம்ஜான் கான் ஆகிய 5 தீவிரவாதிகள்தான் தப்பியிருந்தனர். தலைமறைவாக உள்ள இவர்களைப் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் தப்பி ஓடிய 5 தீவிரவாதிகளும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் உத்தரவுப்படி இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டி வருவதாக மத்திய உளவுத் துறை அமைப்புகள் அடிக்கடி எச்சரித்தன.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் அதிகாரி ஒருவருக்கும், பயங்கரவாதிகளைக் கையாளும் நபர் ஒருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலையும் இந்திய உளவு அமைப்பினர் ஒட்டுக் கேட்டதில், தீவிரவாதிகளுக்கு ஒரு முக்கியமான திட்டம் தரப்பட்டுள்ளது. சில நாட்கள் காத்திருங்கள் என்ற தகவல் இடம்பெற்றிருந்தது.

இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டன. குறிப்பாக கர்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கைத் தகவலை அனுப்பியது மத்திய அரசு. அத்துடன் 5 பயங்கரவாதிகளில் 2 பேர் கர்நாடகத்தில் இருந்ததையும் உளவுத் துறை குறிப்பிட்டிருந்தது.

தெலுங்கானாவின் கரீம்நகரில் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி நடைபெற்ற வங்கிக் கொள்ளை, சென்னை சென்ட்ரலில் மே 1-ந் தேதி இளம் பொறியாளர் கொல்லப்படக் காரணமான பெங்களூரு - குவாஹாத்தி ரயில் குண்டு வெடிப்பு, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஃபாராஸ்கானா, விஷ்ராம்பாக் காவல் நிலையங்களில் ஜூலை 10-ந் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பு ஆகிய நாசவேலைகளில் இந்த தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.

மேலும் இந்த 5 சிமி தீவிரவாதிகளில் 2 பேர் அண்மையில் ஆந்திராவில் சிக்கினர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹைதராபாத், பெங்களூரு உட்பட தென்னிந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதனால் பெங்களூரு போலீசாருக்கு குறிப்பாக உளவுத்துறை அமைப்பு அடிக்கடி எச்சரித்து வந்தது.

இந்த நிலையில் பெங்களூருவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சிமி தீவிரவாதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்த பின்னர் நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் புத்தகயாவில் நிகழ்த்தப்பட்டதுதான். தற்போது பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் இந்த தீவிரவாதிகளின் கை வரிசை இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

மேதி கைதுக்கு பழிவாங்கலா?

சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் @shammiwitness என்ற ட்விட்டர் கணக்கை இயக்கிய மேதி பிஸ்வாஸ் அண்மையில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டிருந்தான். இதனைத் தொடர்ந்து பெங்களூரு நகரில் குண்டுகள் வெடிக்கும் என்று சமூக வலைதளங்கள் மூலமே எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட 15 நாட்களுக்குள் பெங்களூரு நகரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துவிட்டது. இந்த கோணத்தில் விசாரணை நடத்திய பெங்களூரு போலீசார், மேதி சமூக வலைதளங்களில்தான் தீவிரமாக செயல்பட்டு வந்தான். மற்ற தீவிரவாதிகளைப் போல கூட்டாளிகளை இணைத்துக் கொண்டு நாசவேலைகளில் ஈடுபடவில்லை.

இதனால் மேதி கைதுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்க வாய்ப்பு இருக்காது என்று பெங்களூரு போலீசார் தொடக்கம் முதலே நம்பி வருகின்றனர். மேதி கைது சம்பவத்தை முன்வைத்து விளம்பரம் தேடவிரும்பிய நபர்கள்தான் சமூக வலைதளங்களில் குண்டுவெடிப்பு எச்சரிக்கையை விடுத்திருக்கலாம் என்றும் பெங்களூரு போலீசார் கருத்து தெரிவித்து வந்தனர்.

பெங்களூருவில் குண்டுவெடிப்பு இடத்தைப் பார்வையிட்ட முதல்வர் சித்தராமையாவும் கூட, மேதி பிஸ்வாஸ் கைதுக்குப் பின்னர் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் உஷார்படுத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்று கூறியிருந்தார். ஒருவேளை மேதி கைதுக்கான பழிவாங்குதல் நடவடிக்கையாக இருக்குமேயானால் ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தப்பட்ட தனிநபர் தாக்குதலைப் போலத்தான் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.

தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது, இப்படி ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழக் கூடும் என்று ஏற்கெனவே தேசிய புலனாய்வு அமைப்பு எச்சரித்திருந்தது.

சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே வெடிபொருட்களே தற்போது பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் மேதி பிஸ்வாஸ் கைதுக்கு பழிவாங்கும் நடவடிக்கையா? என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களில் விசாரணை நடத்தப்படும் என்கின்றனர் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+