“கஞ்சா டிரை பண்ணுங்க.. மதுவை விடுங்க” - சத்தீஸ்கர் பாஜக எம்எல்ஏ அட்வைஸ் - அவர் சொல்ற காரணம் இருக்கே!
ராய்பூர்: மது அருந்துவதை நிறுத்திவிட்டு கஞ்சா அடிக்க முயற்சிக்கலாம் என்று சத்தீஸ்கர் மாநில பாஜக எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி பந்தி தெரிவித்துள்ள கருத்து கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி பந்தியின் கருத்துக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

பாஜக எம்.எல்.ஏ. கருத்து
"பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் மதுப்பழக்கத்தின் காரணமாகவே அதிகரித்து இருக்கிறது. ஆனால், கஞ்சா அடிப்பதால் அத்தகைய குற்றங்கள் அதிகரிக்காது." என்று பாஜக எம்.எல்.ஏ. தெரிவித்து இருந்தார். ஒரு மக்கள் பிரதிநிதி கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருளை எப்படி விளம்பரப்படுத்தலாம் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி வருகிறது.

விளக்கம்
தனது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து பாஜக எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி பந்தி விளக்கம் அளித்து இருக்கிறார். அதில், "இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதற்கு முன்பாக மாநில சட்டப்பேரவையிலேயே இது குறித்து விவாதித்தவன் நான். 'பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை போன்ற பிரச்சனைகளுக்கு எதோ ஒரு வழியில் மது பழக்கம் காரணமாக இருக்கிறது.

குற்றங்களை தடுக்கலாம்
அந்த குழு கஞ்சாவை நோக்கி செல்வது குறித்து யோசிக்க வேண்டும். மக்களுக்கு போதை பொருள் தேவை என்றால், அவர்களுக்கு கஞ்சா, பாங்கு போன்ற பொருட்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அதன் மூலம் குற்றங்களை தடுக்கலாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே." என்றார் மீண்டும் ஒரு முறை.

கஞ்சாவுக்கு தடை
இந்தியாவில் போதைப் பொருள் சட்ட (NDPS) விதிகளின் அடிப்படையில் கஞ்சா பயன்படுத்துவதற்கும் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் கஞ்சா செடி இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் பாங்கு என்கிற போதைப்பொருள் சட்டப்படி அனுமதிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

முதலமைச்சர் விளக்கம்
பாஜக எம்.எல்.ஏவின் கருத்து குறித்து விளக்கமளித்து இருக்கும் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், எந்த வகையில் அடிமையானாலும் அது நல்லதல்ல. ஒருவேளை கஞ்சாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. விரும்பினால் அவர் மத்திய அரசிடம் இது குறித்து தனது கோரிக்கையை முன்வைக்கட்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications