வாஜ்பாயை எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த நான்கு மாநில முதல்வர்கள்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார் உள்ளிட்ட நான்கு மாநில முதல்வர்கள் வாஜ்பாயை சந்தித்தனர்
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங், ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
முன்னாள் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான அட்டல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவு காரணமாக ஜூன் 11 ஆம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவருடைய உடல்நிலையைப் பற்றிய பல்வேறு வதந்திகள் பரவி வந்ததால், எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது. அதில், 93 வயதாகும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிறுநீரக தொற்று மற்றும் மார்பு வலி ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், சிகிச்சைக்குப் பிறகு, தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் நலமுடன் இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அரசியல் கருத்து வேறுபாடுகளைக் கடந்து, அனைத்துக் கட்சியினரிடமும் நன்மதிப்பை பெற்றவரான வாஜ்பாயை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங், ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ், மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் உள்ளிட்டோர் நேற்று சனிக்கிழமை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
முன்னதாக வாஜ்பாயை, பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications