நாளை வரை திக் திக்.. தமிழகம், புதுவை உட்பட 17 மாநில ஆளுநர்கள் பதவியில் நீடிப்பார்களா?
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகளைப் பொறுத்து தமிழகம், புதுவை உட்பட 17 மாநில ஆளுநர்கள் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பார்களா என்பது தெரிய வரும்.
லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. அதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்துமே பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று கூறுகின்றன.
இருப்பினும் 1989-90ஆம் ஆண்டுகளைப் போல மாநிலக் கட்சிகளை ஆட்சியில் அமர வைத்து காங்கிரஸ் கட்சி ஆதரவு தரக் கூடிய நிலையும் வரலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

3 ஆளுநர்கள் ராஜினாமா முடிவு
இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் மாநில ஆளுநர் மார்க்ரெட் ஆல்வா, கர்நாடகாவின் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ், குஜராத்தின் கம்லா பெனிவால் ஆகியோர் ஏற்கெனவே ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் கூறியிருக்கின்றனர். நாளை பிற்பகல் வரை காத்திருக்குமாறு அவர்களிடம் சோனியா கூறியுள்ளார்.

எந்தெந்த மாநில ஆளுநர்கள்..
தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் ஆளுநர்களாக இருப்பவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள்.
ரோசையா (தமிழகம்), வீரேந்திர கட்டாரியா (புதுச்சேரி), மார்க்ரெட் ஆல்வா( ராஜஸ்தான்), கமலா பெனிவால் (குஜாராத்)
ஷீலா தீட்சித் (கேரளா), பரத்வாஜ் (கர்நாடகா)., ஜே.பி. பட்நாயக் (அஸ்ஸாம்), டி.ஒய். பாட்டீல் (பீகார்), ஜெகன்னாத் பகாடியா (ஹரியானா),
ஊர்மிளா சிங் (ஹிமாச்சல்), சையத் அகமது (ஜார்க்கண்ட்), ராம்நரேஷ் யாதவ் (மத்திய பிரதேசம்), எஸ்.சி. ஜாமிர் (ஒடிஷா), தேவானந்த் கொன்வார் (திரிபுரா),
ஜோஷி (உத்தரபிரதேசம்), அஜிஸ் குரேஷி (உத்தர்காண்ட்), சிவராஜ் பாட்டீல் (பஞ்சாப்)

ஆளுநர்களாக அதிகாரிகள்
மேலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கமான அதிகாரிகளான எம்.கே. நாராயணன் (மே.வங்கம்), சேகர் தத் (சத்தீஸ்கர்), சங்கரநாராயணன் (மகாராஷ்டிரா) ஆகியோரும் ஆளுநர்களாக இருக்கின்றனர்.

ராஜினாமா?
தற்போது மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் இவர்கள் அனைவரும் மாற்றப்படுவார்களா? அல்லது சிலர் ராஜினாமா செய்வார்களா? என்பது ஓரிரு நாட்களில் தெளிவாகிவிடும்.

கடந்த காலத்தில்..
கடந்த 2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை அமைத்த போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த விஷ்ணு காந்த் சாஸ்திரி (உ.பி), கைலாசபதி மிஸ்ரா (குஜராத்), பாபு பரமானந்த் (ஹரியானா), கிதார்நாத் சகானி (கோவா) ஆகிய ஆளுநர்கள் மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications