நிலக்கரி சுரங்க ஊழல்: சிறப்பு அரசு வழக்கறிஞராக ஆர்.எஸ். சீமா நியமனம்!
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்குகளில் ஆஜராக அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ஆர்.எஸ்.சீமா நியமிக்கப்பட்டுள்ளார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து பல்வேறு நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் இந்த வழக்குகள் நடைபெற்று வந்தன.
அண்மையில் இந்த வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அரசுத் தரப்பில் வாதாடுவதற்காக தகுதிவாய்ந்த வழக்கறிஞர்களை நியமித்து அவர்களின் பெயர்களை தெரிவிக்கவும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இது குறித்து கருத்து தெரிவித்திருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக கோபால் சுப்பிரமணியத்தை நியமிக்கலாம். ஆனால் அது குறித்து அவரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஏனெனில் உச்சநீதிமன்ற நீதிபதியாக கோபால் சுப்பிரமணியத்தை நியமிக்கலாம் என்று நீதிபதிகள் நியமனக் குழு பரிந்துரைத்திருந்தது. ஆனால் மத்திய அரசு அவரது பெயரை நிராகரித்தது. அப்போது தமது பெயரை பரிந்துரைக்க வேண்டாம் என்று நீதிபதிகள் நியமனக் குழு கடிதம் எழுதி அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
இதனாலேயே கோபால் சுப்பிரமணியத்தின் ஒப்புதல் அவசியம் என்று தலைமை நீதிபதி லோதா கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கை தொடர்ந்த சர்மா, கோபால் சுப்பிரமணியம் அலுவலகத்தை தொடர்பு கொண்டார். ஆனால் கோபால்சுப்பிரமணியம் இதனையும் நிராகரித்தார்.
இதைத் தொடர்ந்து வேறு சில மூத்த வழக்கறிஞர்கள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதனையடுத்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்குகளில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ஆர்.எஸ்.சீமா நியமிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், நிலக்கரி ஊழல் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளையும் இனி கூடுதல் அமர்வு நீதிபதி பாரத் பரஷார் விசாரணை நடத்துவார். இந்த சிறப்பு நீதிமன்றம் நிலக்கரி ஊழல் வழக்குகளை நாள்தோறும் விசாரணை நடத்தும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.