தேங்காய் தட்டுப்பாட்டில் தவிக்கும் தென்னை மர தேசம் கேரளா...!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டால் தமிழ்நாட்டில் இருந்து வாங்கி விற்கும் நிலைக்கு கேரள வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கேரளாவுக்கு தேங்காய்ப் பற்றாக்குறையா என்று ஆச்சரியம் எழலலாம். ஆனால் அது உண்மையாகியுள்ளது.
அங்கு தேங்காய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்திடம் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனராம்.
கடவுளின் தேசம்:
கடவுளின் தேசம் எனப்படும் இயற்கை எழில்கொஞ்சும் கேரள மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் தென்னை மரங்களாக காட்சி அளிக்கும்.பெரும்பாலான வீடுகள் தென்னை மரங்கள் சூழ்ந்தே காணப்படும்.
மக்களின் உணர்வில் கலந்த தேங்காய்:
மேலும் தேங்காய் கேரள மக்களின் உணவில் மிக முக்கிய இடத்தை பிடித்து உள்ளது. உணவில் அதிகளவில் தேங்காயை சேர்ப்பது கேரள மக்களின் வழக்கமாகும். தேங்காய் எண்ணையின் பயன்பாடும் இங்கு அதிகமாகும்.
வானுயர்ந்த அழகு:
வானுயர வளர்ந்து காட்சி அளிக்கும் தென்னை மரங்கள் நிறைந்த பகுதியை கடந்து செல்லும்போதே மனதுக்கு மகிழ்ச்சியாகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கும்.
தமிழகத்திலிருந்து இறக்குமதி:
தற்போது கேரளாவில் இந்த நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கேரளாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து தேங்காய்கள் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரப்பருக்கு மாறிய சேட்டன்கள்:
கேரளாவில் 40 சதவீதம் நிலப்பரப்பில் தென்னை மரங்கள் இருந்தன. தற்போது நோய் தாக்குதல் காரணமாகவும் கேரளா மக்கள் தென்னை விவசாயத்தைவிட ரப்பர் தோட்டங்கள் அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டியதால் தற்போது தென்னை மரங்கள் இருந்த இடங்கள் எல்லாம் ரப்பர் தோட்டங்களாக காட்சி அளிக்கிறது.
லாரி லாரியாக தமிழகத்திலிருந்து:
தென்னையைவிட அதிக லாபம் கிடைப்பதால் ரப்பர் தோட்டங்கள் பெருகி கிட்டத்தட்ட 30 சதவீத இடத்தை ரப்பர் தோட்டங்கள் ஆக்கிரமித்து விட்டன. இதனால் கேரளாவில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கேரள மக்களின் தேங்காய் தேவையை பூர்த்தி செய்ய கேரள வியாபாரிகள் தமிழ்நாட்டில் இருந்து தேங்காயை லாரி லாரியாக வாங்கி கேரளாவுக்கு கொண்டு செல்கிறார்கள்.
தேடித்தான் பார்க்கோனும்:
தமிழ்நாட்டில் லாரி ஸ்டிரைக் நடந்தால் தேங்காய்களை கொண்டு வர முடியாத நிலை ஏற்படும். அப்போது தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துவிடும். இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் கேரளாவில் தென்னைமரத்தை தேடி கண்டுபிடிக்கும் நிலை ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
அழகாய் இருந்தது.. ஆனால் பயமாய் இருக்கிறதே:
அழகுக்கும்,தேங்காய்க்கும் பேர்போன கேரளா,கால மாற்றத்தால் தேங்காய் தட்டுப்பாட்டில் சிக்கி தவிப்பது இயற்கை பற்றிய பயத்தை மனதில் ஆழமாக விதைக்கிறது.