தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்ட காங்கிரஸ்: பவார் கட்சி மீது குற்றச்சாட்டு
சன்டிகர்: ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல்களின்போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் மகாராஷ்டிராவில் பாஜக பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன் முன்னிலையில் உள்ளது. அங்கு பாஜக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் தனிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
ஆனால் ஹரியானாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைக்க உள்ளது. பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த இந்த 2 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில் தோல்வியை ஒப்புக் கொண்ட ஹரியானா முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பி.எஸ்.ஹூடா பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான அபிஷேக் சிங்வி கூறுகையில்,
மகாராஷ்டிராவில் எங்களுடன் கூட்டணி வைத்திருந்த கட்சியே ஊழல் குற்றச்சாட்டு கூறியதால் மக்களிடையே கட்சி பற்றி தவறான எண்ணம் ஏற்பட்டது. ஒரு கட்சி 15 ஆண்டுகளாக ஆட்சி நடத்தினால் மக்களுக்கு அந்த கட்சி மீது அதிருப்தி ஏற்படத் தான் செய்யும். அத்தகைய நிலைமை தான் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹரியானாவில் சிறப்பாக செயல்பட்டும் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.