ராஜஸ்தானில் இதை எதிர்பார்க்கல! காங்கிரஸ்- பாஜக கடும் போட்டி! கடைசியில் கரை சேர்வது யார்! புது சர்வே
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கே எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து டைம்ஸ் நவ் நவ்பாரத் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இப்போது காங்கிரஸ் தலைமையிலான அசோக் கெலாட் அரசு ஆட்சியில் இருக்கிறது. அங்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குத் தேர்தல் ஜுரம் ஆரம்பித்துள்ளது.

அங்குக் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடியாகப் போட்டி இருப்பதால், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் எனப் போராடும் நிலையில், மறுபுறம் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க போராடுகிறது.
ராஜஸ்தான் தேர்தல்: இதற்கிடையே இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்த டைம்ஸ் நவ் நவ்பாரத் இடிஜி கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் இப்போது கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என இந்த சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.
இந்த டைம்ஸ் நவ் சர்வே-இன் படி இரு கட்சிகளும் சுமார் 42 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே எந்தளவுக்கு கடும் போட்டி என்றால் இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 0.60% மட்டுமே இருக்குமாம். அந்தளவுக்கு இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடும் போட்டி: அங்கு மொத்தம் 200 இடங்கள் இருக்கும் நிலையில், எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்க 101 இடங்களாவது தேவை. இந்த தேர்தலில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 91-101 இடங்களும் பாஜகவுக்கு 95-105 இடங்களும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 15 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் இத கட்சிகள் 3-6 இடங்களைக் கைப்பற்றும் என்றும் அந்த டைம்ஸ் நவ் சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.
எங்கே: பிராந்தியம் வாரியாக பார்க்கும் போது துப்தாரில், பாஜக 27-29 இடங்களிலும், காங்கிரஸ் 28-30 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல மார்வாரில் காங்கிரஸை காட்டிலும் பாஜகவுக்குத் தான் அட்வான்டேஜ். அங்கே பாஜக 30-32 இடங்களில் வெல்லும். மறுபுறம் காங்கிரஸ் 27-29 இடங்களில் மட்டுமே வெல்லும் என இந்த சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.
மேவார் பிராந்தியத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி கடுமையாகச் சரிசமமாகவே இருக்கும். காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு கட்சிகளும் தலா 20-22 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஹடோதி பிராந்தியத்தில் பாஜக 8-10 இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த பிராந்தியத்தில் காங்கிரசுக்கு 7-9 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என அந்த சர்வே-இல் கூறப்பட்டுள்ளது. ஷேகாவதி பிராந்தியத்தில் பாஜக 10-12 இடங்களிலும், காங்கிரஸின் 9-11 இடங்களிலும் வெல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது காங்கிரஸ் கட்சிக்கு 91-101 இடங்களும் பாஜகவுக்கு 95-105 இடங்களும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் இப்போதே இரு தரப்பும் பிரசாரத்தைத் தீவிரமாக ஆரம்பித்துள்ளது. இங்குத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப் போகிறது என்பது இன்னும் சில மாதங்களில் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications