மாமா வீட்டு பணமா: மோடி பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்ட மத்திய நிதி, ராகுல் காந்தியின் மாமா வீட்டு பணமா என்று பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியது குறித்து தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலையொட்டி நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி,சத்தீஸ்கர் மாநிலத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மத்திய நிதி உங்கள் மாமா வீட்டு நிதியா என்று ராகுலைப் பார்த்து கேட்டார். இதற்கு காங்கிரஸ் பதிலடி தரும் வகையில், குஜராத்தில் நீங்கள் செலவழிக்கும் தொகை உங்க தாத்தா வீட்டு பணமா என்று கூறியது.
தற்போது இந்த பேச்சு தேர்தல் ஆணையத்திடம் போயிருக்கிறது. மோடியின் பேச்சு தொடர்பாக காங்கிரஸ் கட்சியானது தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளது. பாரதிய ஜனதாவும் காங்கிரஸ் கட்சியும் பரஸ்பரம் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுப்பது தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது.