சாத்தான் வேதம் ஓதுகிறது: காங்கிரஸை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய வெங்கையா நாயுடு
டெல்லி: நில மசோதா பற்றி காங்கிரஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது என்று அவை தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. ஆனால் நில மசோதா விவசாயிகளின் நலனை கருத்தில் வைத்து தான் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காங்கிரஸ்
நிலம் கையகப்படுத்தும் மசோதா பற்றி காங்கிரஸ் தவறான தகவல்களை பரப்பி வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்யில் இருக்கையில் பல சட்ட திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் நில மசோதாவை அறிமுகப்படுத்தியதை ஜனநாயக கொலை என்று கூற எதிர்கட்சிகளுக்கு உரிமை இல்லை.
சாத்தான்
நில மசோதா பற்றி காங்கிரஸ் விமர்சிப்பது சாத்தான் வேதம் ஓதுவது போன்று ஆகும். அவர்கள் எண்ணற்ற தடவை அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் 456 அவசர சட்டங்களை அவர்கள் கொண்டு வந்துள்ளனர்.
அவசர சட்டம்
ஜவஹர்லால் நேருவின் ஆட்சியின்போது 77 அவசர சட்டங்களும், இந்திரா காந்தி ஆட்சியில் 77 அவசர சட்டங்களும், ராஜீவ் காந்தி ஆட்சியில் 2 மாதங்களுக்கு ஒரு முறை 3 அவசர சட்டங்கள் என 35 அவசர சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.
பொய்
பொய்யான தகவல்களை பரப்புவதற்கும் ஒரு அளவு உண்டு. ஒரு பொய்யை 10 முறை கூறினால் அது உண்மையாகிவிடாது. நாங்கள் ஜனநாயக கொலை செய்ததாக கூறும் நீங்கள் அவசர நிலையை கொண்டு வந்து லட்சக்கணக்கான மக்களை சிறையில் அடைத்ததற்கு பெயர் என்ன?. நீங்கள் பழையவற்றை எல்லாம் மறந்துவிட்டீர்கள்.
தாக்கு
எங்களை விமர்சிக்கும் முன்பு நீங்கள் செய்ததை நினைத்துப் பாருங்கள். பல பாவங்களை செய்துவிட்டு புனித யாத்திரை செல்வது போன்று உள்ளது உங்களின் செயல். நீங்கள் என்னவெல்லாம் கொண்டு வந்தீர்கள் என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம் என்றார்.