காங்கிரஸ் தலைவர் யார்..? “இப்பவே முடிவெடுங்க” - பரபரப்பைக் கிளப்ப மூத்த தலைவர்கள் திட்டம்!?
உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸின் சிந்தனையாளர் மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாகவும், அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு வியூகங்களை வகுப்பது தொடர்பாகவும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
மேலும், ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்று ஸ்டாலினுக்காக வந்தாரே.. பார்த்தீங்களா! டாப் நிர்வாகியை தூக்கியது காங்கிரஸ்.. சோனாவிற்கு கோபம்?
காங்கிரஸில் குழப்பம்
2014 மக்களவைத் தேர்தல் தொடங்கி காங்கிரஸ் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. 2019 மக்களவைத் தேர்தலிலும் தோல்வியடைந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபைத் தேர்தலிலும் நான்கில் தோல்வியைச் சந்தித்தது. ஆட்சியில் இருந்த பஞ்சாப்பையும் ஆம் ஆத்மியிடம் இழந்தது.
இதனால், கட்சிக்குள்ளேயே அதிருப்தி குரல்கள் கடுமையாக ஒலிக்கத் தொடங்கின. பா.ஜ.கவை எதிர்க்க வலிமையான தலைமை வேண்டும் என நிர்வாகிகள் கூறி வந்தனர்.
பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர் சோனியாவிடம், தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை அளித்தார். அவரை முழுநேரமாக கட்சியில் சேர்க்கும் முடிவுக்கு மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிக்கல் எழுந்தது. அவருக்கு மொத்த அதிகாரத்தையும் வழங்கக்கூடாது என பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, காங்கிரஸுக்கு நான் தேவையில்லை. வலிமையான தலைமைதான் தேவை எனக் கூறிய பிரசாந்த் கிஷோர், காங்கிரஸில் சேரப்போவதில்லை என அறிவித்தார்.
காங்கிரஸ் சிந்தனையாளர்கள் மாநாடு
இந்நிலையில், காங்கிரஸில் முக்கிய மாற்றங்களைச் செய்வதற்காக ராஜஸ்தானின் உதய்பூரில் சிந்தனையாளர்கள் மாநாட்டை நடத்த காங்கிரஸ் தலைமை திட்டமிட்டது.
உதய்பூரில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க, 430 மூத்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சோனியா காந்தி விமானம் வாயிலாக உதய்பூர் சென்றுள்ளார். ராகுல் காந்தி உதய்பூருக்கு ரயிலில் சென்றுள்ளார்.
தேர்தல் வியூகம்
பிரசாந்த் கிஷோர் கைவிரித்துவிட்ட நிலையில், வரவிருக்கும் சட்டசபை தேர்தல்கள், 2024ல் நடைபெறும் மக்களவைத் தேர்தல் ஆகியவற்றை எதிர்கொள்வது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள், ஆலோசனைகள் தொடர்பாக அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சோனியா காந்தியிடம் சமர்ப்பிக்கப்படும் அதைத் தொடர்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மீண்டும் தலைவர்?
மேலும், இந்த சிந்தனையாளர்கள் மாநாட்டில் ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிப்பதற்கு மூத்த தலைவர்கள் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாநாட்டின் இறுதி நாளில் இந்த முன்மொழிவைச் செய்ய மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த மாநாடு குறித்த விவாதங்கள் அரசியல் நோக்கர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.