முன் வரிசையில் நாற்காலி இல்லையா.. கோபமாய் கிளம்பிய காங். எம்.எல்.ஏ
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு விழாவில் தனக்கு முன் வரிசையில் நாற்காலி ஒதுக்கவில்லை எனக் கூறி காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கோபமாக நிகழ்ச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகி உள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் சிவராஜ் சவுகான் முதலமைச்சராக உள்ளார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் குவாலியர் கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக சதீஷ் சிகர்வார் என்பவர் உள்ளார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை குவாலியரில் தான்சேன் சம்ரோ என்ற பெயரில் அரசு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் உள்ளூர் பாஜக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்
குவாலியர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ என்ற முறையில் சதீஷ் சிகர்வாரும் உள்ளூர் மாவட்ட நிர்வாகத்தினரால் அழைக்கப்பட்டிருந்தார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு வந்த சதீஷ் மேடையில் ஏறிய போது அவருக்கு இரண்டாவது வரிசையில் அதிகாரிகள் உட்கார இடம் ஒதுக்கி இருந்தனர்.

இரண்டாவது வரிசையில் இடம்
உள்ளூர் பாஜக பிரமுகர்கள் முன் வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினரான தனக்கு முன் வரிசையில் நாற்காலி ஒதுக்கப்படாததால் கோபமடைந்த சதீஷ் அதிகாரிகளை கடுமையாக திட்டியதோடு மேடையை விட்டு சத்தமிட்டபடியே வேக வேகமாக நடந்து சென்றார்.

எம்.எல்.ஏ.வின் செயலால் அதிர்ச்சி
இதையடுத்து உள்ளூர் அதிகாரி ஒருவர் அவரை பலமுறை அழைத்தும் கண்டுகொள்ளாமல் சென்றது மேடையில் சிறப்பு விருந்தினராக அமர்ந்திருந்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் , மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து முதலமைச்சரின் உத்தரவுபடி சதீஷ் மேடையின் முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் வந்து மேடையில் அமர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

எம்.எல்.ஏ. விளக்கம்
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ சதீஷ் சிகர்வார் , நிகழ்ச்சி அமைப்பாளர்களால் தனக்கு திட்டமிட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது எனவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தரவேண்டிய மரியாதையை அவர்கள் தராததால் தான் கோபமாக வெளியேறியதாகவும் அதே நேரத்தில் தான்சேன் நினைவாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் நிகழ்ச்சிக்கு மீண்டும் திரும்பியதாக அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications