நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிரான 'யூத்' காங்கிரஸ் பேரணி: 'தல ராகுல்' ஆப்சென்ட்!!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி எங்கே இருக்கிறார் என்பது மர்மமாக இருக்கும் நிலையில் அவர் இல்லாமலேயே இளைஞர் காங்கிரசார் டெல்லியில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.
நிலம் கையகப்படுத்தும் மசோதா லோக்சபாவில் கடந்த 10-ந்தேதி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் பாரதிய ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை மத்திய அரசு கேட்டுள்ளது.

ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை மிகவும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லி நோக்கி பிரமாண்ட பேரணி நடத்துவதும் என்றும் டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் கடந்த பல வாரங்களாக ராகுல் காந்தி எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் மர்மமாக இருந்து வந்தது. இதனால் இன்றைய போராட்டத்துக்கு ராகுல் வந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.
ஆனால் ராகுலை எதிர்பார்க்காமல் ஏற்கெனவே திட்டமிட்டபடி உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இருந்து பேரணியாக நடந்து டெல்லி வந்தனர். மசோதா விவசாயிகளுக்கு எதிரானது என்ற கோஷங்களுடன் ஊர்வலமாக அவர்கள் வந்தனர்.
இப்பேரணி டெல்லி ஜந்தர் மந்தரில் முடிவடைந்தது. இதில் ஜெய்ராம் ரமேஷ், ராஜ் பப்பார், ரந்தீப் சுர்ஜேவாலா மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அம்ரிந்தர் சிங் ராஜா பரார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இருப்பினும் டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுல் காந்தி அங்கு வரவில்லை.இதனால் ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, சச்சின் பைலட், குமாரி செல்ஜா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களே இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
இந்தப் போராட்டத்தின் போது தடையை மீறி நாடாளுமன்றத்தை முற்றுகையிடச் செல்ல முயன்ற இளைஞர் காங்கிரசார் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்ததுடன் தடியடி நடத்தியும் கட்டுப்படுத்தினர்.
இம் மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகள் நாளை பேரணியாக சென்று ஜனாதிபதியிடம் மனு கொடுக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications