இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற நினைக்கிறார்கள்.. காங்கிரஸ் மீது பாய்ந்த மோடி
மெகபூப்: இந்துக்களை அவர்களின் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என்றும், காங்கிரஸ் கட்சியின் மனப்பான்மை இந்துக்களுக்கு எதிரானதாக உள்ளது என்றும் தெலுங்கானாவில் இன்று பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி கூறினார்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மூன்று கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. இந்த தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளும் ஆட்சியை தக்க பாஜகவும் தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில் பிரதமர் மோடியும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தெலுங்கானாவின் மெகபூப் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- "கிருஷ்ணா மற்றும் துங்கபத்ரா நதிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட பகுதியான இங்கு விவசாயிகள் கூலி வேலைக்காக புலம் பெயர்ந்து செல்கிறார்கள்.
தெலுங்கானாவில் ஆளும் மாநில அரசு இந்த பகுதியில் பாசன திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என்ற ஒரு பொய்யான வாக்குறுதியை அளித்து காங்கிரஸ் அவர்களின் முதுகில் குத்திவிட்டது.
தென்னிந்திய மக்களை ஆப்பிரிக்கர்கள் என்று அமெரிக்காவில் இருந்து கொண்டு இளவரசரின் ஆலோசகர் சொல்கிறார். தெலுங்கானா மக்களை ஆப்பிரிக்கர்கள் என்று கூறுகிறார். தோலின் நிறத்தின் அடிப்படையில் இந்தியர்கள் யார், ஆப்பிரிக்கர்கள் யார் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்ய நினைக்கிறது.
இந்துக்கள் மற்றும் இந்து பண்டிகைகளை காங்கிரஸ் கட்சி வெறுக்கிறது. தற்போது தினமும் இது அம்பலப்பட்டு வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டக் கூடாது என்று இளவரசரின் (ராகுல் காந்தி) குரு கூறினார். ராமர் கோயில் கட்டுவதும் ராம நவமியை கொண்டாடுவதும் இந்தியாவுக்கு எதிரானது என்கிறார் அவர். அயோத்தி சென்று ராம நவமியை கொண்டாடினால் நீங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்களா?
இந்துக்களை அவர்களின் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. காங்கிரஸ் கட்சியின் மனப்பான்மை இந்துக்களுக்கு எதிரானதாக உள்ளது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை, மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டுகிறது. இவ்வாறு மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications