கருப்புப் பண பட்டியலில் எவ்வளவு பெரிய "முதலை" இருந்தாலும் கவலையில்லை- ப.சிதம்பரம்
டெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தன் கைவசம் உள்ள கருப்புப் பண முதலைகள் பட்டியலை தாராளமாக வெளியிடலாம். அதை வெளியிட்டால் காங்கிரஸ் தர்மசங்கடமடையும் என்று அவர் கூறுகிறார். அந்தப் பட்டியலில் எவ்வளவு பெரிய நபரின் பெயர் இருந்தாலும் காங்கிரஸ் கலங்காது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஒரு தொலைக்காட்சிக்கு ப.சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில், எவ்வளவு பெரிய பெயராக இருந்தாலும், எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் அதற்காக கட்சி தர்மசங்கடப்படாது.
இவர்கள் எல்லாம் தனி நபர்கள். இவர்களின் பண இருப்புக்கும், கட்சிக்கும் தொடர்பு கிடையாது. எனவே நாங்கள் கலங்க வேண்டிய அவசியம் இல்லை என்று ப.சிதம்பரம் விளக்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியிலிருந்து....

யார் யார்
அருண் ஜேட்லி வசம் உள்ள பட்டியலில் யார் யாருடைய பெயர் எல்லாம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது.

என்னிடம் அவர் எதுவும் பேசவில்லை
இதுதொடர்பாக எந்தப் பட்டியலையும் அருண் ஜேட்லி என்னிடம் காட்டவில்லை. என்னிடம் எதுவும் கூறவில்லை.

பிளாக் மணியா இல்லை பிளாக்மெயிலா
பிளாக் மணி குறித்து கருத்துக் கூற வேண்டிய ஜேட்லி தற்போது பிளாக் மெயிலில் இறங்கியுள்ளதாகவே தெரிகிறது.

பெயரைச் சொல்லுங்கள்
முதலில் தன்னிடம் உள்ள பட்டியலை ஜேட்லி வெளியிடட்டும். பெயர்களைக் கூறட்டும். பிறகு பேசலாம்.

செலக்டிவ்வாக வெளியிடக் கூடாது
அதேசமயம், எனது கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் குழுத் தலைவர் அஜய் மேக்கான் ஏற்கனவே கூறியபடி, பெயர்களைத் தேர்ந்தெடுத்து அரசு வெளியிடக் கூடாது. அனைத்துப் பெயர்களையும் வெளியிட வேண்டும். இதில் பழிவாங்கும் போக்கு இருக்கக் கூடாது.

நாங்கதான் அன்றே சொன்னோமே
அதேசமயம், இன்று இந்த விவகாரத்தில் பாஜக எடுத்துள்ள நிலைப்பாடு, அன்றே நாங்கள் எடுத்த நிலைப்பாடுதான். நாங்கள் சொன்னதை அன்று அவர்கள் விமர்சித்தார்கள். இன்று அவர்களே அதே நிலைப்பாட்டைத்தான் எடுக்க வேண்டி வந்துள்ளது என்றார் ப.சிதம்பரம்.

யார் அந்தப் பெரும்புள்ளி
அதேசமயம், இந்தக் கருப்புப் பணப் பட்டியலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசில் இடம் பெற்றிருந்த மிக முக்கியமான அமைச்சர் ஒருவரின் பெயர் இடம் பெற்றிருப்பதாக அருண் ஜேட்லி பூடகமாக பேசியிருந்தார் என்பதால், அந்தப் பெரும் புள்ளி யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications