குஜராத் பால விபத்து.. 9 பேருக்கு சிறை - 2 முறை அதே காண்டிராக்டர்! “அன் ஃபிட்” என நீதிமன்றம் கருத்து
காந்திநகர்: குஜராத்தில் அறுந்து விழுந்த மோர்பி பாலத்தை பராமரித்த காண்டிராக்டர்கள் தகுதியானவர்கள் இல்லை என்று கூறியுள்ள மாவட்ட நீதிமன்றம், 9 பேரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டு இருக்கிறது.
மோர்பி மச்சு ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட பாலம் அண்மையில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக சமீபத்தில் திறக்கப்பட்டது.
அஜண்டா கடிகார நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான ஒரேவா குழுமம் பராமரித்து வந்த இந்த பாலம் கடந்த ஞாயிற்றுக் கிழமை அறுந்து விழுந்ததில் 135 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

9 பேர் சிறையிலடைப்பு
இது தொடர்பாக ஒரேயோ குழுமத்தின் 2 மேலாளர்கள், 2 துணை ஒப்பந்ததார்கள், டிக்கெட் புக்கிங் செய்த கிளார்க், பாதுகாவலர் என 9 பேரை காவல்துறை கைது செய்தது. அவர்கள் 9 பேரும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது விபத்து தொடர்பாக தடயவியல் அறிக்கையை நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்தது.

தடயவியல் அறிக்கை
அதிக மக்கள் கூட்டம் பாலத்தில் நின்றதால் எடை அதிகரித்ததன் காரணமாக பாலத்தை தாங்கி பிடித்து இருந்த முக்கிய கேபிள் அறுந்துவிட்டதால் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. பாலம் புதுப்பிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மக்கள் நடக்கும் தரைப்பகுதி மட்டுமே மாற்றப்பட்டதாகவும் கேபிளில் எந்த மாற்றமும் செய்யவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 முறை ஒப்பந்தம்
அதேபோல் 4 அடுக்கு கொண்ட அலுமினியம் விரிப்புகளை தரைக்காக பயன்படுத்தியதால் பாலத்தின் எடை அதிகரித்துவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர், "கடந்த 2007 ஆம் ஆண்டு இந்த பாலத்தை சீரமைக்க கொடுத்த அதே ஒப்பந்ததாரரிடமே 2022 ஆம் ஆண்டிலும் சீரமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு
இவர்களையே 2 முறை தேர்வு செய்ததற்கான காரணம் என்ன என்று விசாரிக்க வேண்டும்." என்று வலியுறுத்தினார். இதனை கேட்ட நீதிபதி எம்.ஜே.கான், தொங்கு பாலத்தை சீரமைத்த 2 ஒப்பந்ததாரர்களுமே, இதுபோன்ற பணிகளை செய்ய தகுதியற்றவர்கள் என்று கூறி கைது செய்யப்பட்ட 9 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

கடும் கூட்டம்
குஜராத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மாறிய இந்த பாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வார விடுமுறை காரணமாக அதிகம் காணப்பட்டதால் நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமான அளவில் மக்கள் கூட்டம் திரண்டது. டிக்கெட் கவுண்டரிலும் அனுமதிக்கப்படதை விட அதிகமான நபர்களிடம் கட்டணம் பெற்றுக்கொண்டு உள்ளே அனுமதித்ததால் எடை அதிகரித்தது.

அறுந்த பாலம்
எடை அதிகரித்ததால் பாலம் அறுந்து விழவே அதன் நின்றுகொண்டிருந்த மக்கள் ஆற்றில் விழுந்தனர். இதில் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் உட்பட 135 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications