கன்வர் யாத்திரை அனுமதிக்காதீங்க-கொரோனா 3-வது அலையை வலிய கூப்பிடாதீங்க- உத்தரகாண்ட் அரசுக்கு அட்வைஸ்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கன்வர் யாத்திரைக்கு அனுமதி கொடுத்து கொரோனா 3-வது அலையை வலிய போய் வரவழைக்காதீர்கள் என்று இந்திய மருத்துவர் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.
உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவில் ஜூலை 4-ந் தேதியே கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டிருந்த அறிக்கையில், எந்த நேரத்திலும் இந்தியாவில் கொரோனா 3-வது அலை தொடங்கலாம்;; அதனால் சுற்றுலாத் தலங்கள், யாத்திரைகள், திருவிழாக்களுக்கு அனுமதி கொடுத்து கொரோனாவை பரவ வழிவகுத்துவிட வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில அரசுக்கு அம்மாநில இந்திய மருத்துவர் சங்க கிளை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாதயாத்திரை நிகழ்வான கன்வர் யாத்திரைக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் புனித தலங்களான ஹரித்வார், ரிஷிகேஷுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்ல இந்த அனுமதி வழங்கப்பட்டது.
இத்தகைய அனுமதியை உத்தரகாண்ட் அரசு தவிர்க்க வேண்டும். இப்படி பொதுமக்களை ஒன்றுகூட அனுமதித்தால் கொரோனா 3-வது அலையை நாமே வலியப் போய் வரவழைப்பதாகிவிடும் என அறிவுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications