முக கவசம் அணிய மறுத்த மகனை கொலை செய்த முதியவர்
கொல்கத்தா: முக கவசம் அணிய மறுத்த 45 வயது மாற்றுத்திறனாளி மகனை கொலை செய்த 78 வயது முதியவர்
கொல்கத்தா: கொரோனா லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் வெளியே செல்ல முயன்ற 45 வயது மாற்றுத் திறனாளி மகன் முக கவசம் அணிய மறுத்ததால் ஏற்பட்டதால் அவரை கொலை செய்ததாக 78 வயது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் மே 3-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஏப்ரல் 20-ந் தேதி முதல் லாக்டவுனில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் நாளை முதல் நாடு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காலத்தில் சட்டவிரோத மது விற்பனை, மது கிடைக்காத துயரத்தில் தற்கொலை என பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.
கொல்கத்தாவில் நேற்று ஒரு துயரம் நிகழ்ந்திருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் லாக்டவுன் காலத்தில் வெளியே நடமாடுவோர் முக கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகள் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டவையாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஷியாம்புகுர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 78 வயது முதியவர் தமது 45 வயது மாற்றுத் திறனாளி மகன் வெளியே செல்லும் போது எல்லாம் முக கவசம் அணிய வற்புறுத்தி உள்ளார். இது தொடர்பாக கடந்த சில நாட்களாக இருவரும் அடிக்கடி சண்டையிட்டுள்ளனர்.
இதேபோல் நேற்று சனிக்கிழமையும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மாற்றுத் திறனாளி மகன் மரணமடைந்தார். இதனையடுத்து 78 வயது முதியவர் காவல்நிலையத்துக்கு சென்று மகனை கொலை செய்துவிட்டதாக சரணடைந்திருக்கிறார்.
கொரோனா துயரங்கள்!