உங்களுக்கு மனசாட்சியே இல்லையா... தூய்மை திட்டத்துக்காக ஆதரவற்ற முதியவர்களை வெளியேற்றிய அதிகாரிகள்!
இந்தூர்: மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் தூய்மை இந்தூர் திட்டத்திற்காக ஆதரவற்ற முதியவர்களை வலுக்கட்டாயமாக மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினார்கள்.
மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் மாநகராட்சியின் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட 10-க்கும் மேற்பட்ட முதியவர்கள் வலுக்கட்டாயமாக உஜ்ஜைன் பகுதியில் உள்ள ஷிப்ரா ஆற்றக்கரையோரத்தில் மூட்டை, முடிச்சுகளுடன் இறக்கிவிடப்பட்டனர். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் முதியவர்களை விட்டு சென்ற மாநகராட்சி ஊழியர்களிடம் ஆதரவற்ற முதியவர்களை ஏன் இங்கே விட்டு செல்கிறீர்கள்? என அப்பகுதி மக்கள் கேட்டனர். மேலும் இந்த காட்சிகளை படம் பிடித்த அவர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தூய்மையான இந்தூர் திட்டத்திற்காக மேலதிகாரிகள் உத்தரவின்பேரில் முதியவர்களை விட்டு செல்வதாக கூறி அவர்கள் சென்றனர். மிகவும் வயதான அந்த முதியவர்களால் தங்களுக்கு நடக்கும் கொடுமையை சொல்ல கூட முடியவில்லை.மனிதாபிமானமற்ற இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியது.
இதை அறிந்த மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ''ஏழைகளுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவைக்கு சமமானது. இந்த சம்பவத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை என ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்தார். இதை பார்த்து கண்ணீர் வடித்த பலரும் இந்தூர் மாநகராட்சி அதிகாரிகளை திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்தூர் மாநகராட்சி துணை ஆணையர் பிரதாப் சோலன்கி மற்றும் 2 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.