ஜம்மு காஷ்மீரில் வேட்டை: பயங்கரவாதிகளின் வீடுகள் வெடிவைத்து தகர்ப்பு-200 'ஸ்லீப்பர் செல்கள்' கைது!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் படுகொலையைத் தொடர்ந்து அங்கு பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் 7 வீடுகள் வெடிவைத்து தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டன; மேலும் பயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல்லாக இருந்த 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு உறவுகளை மத்திய அரசு துண்டிப்பதாக அறிவித்துவிட்டது. பாகிஸ்தானும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிம்லா ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்தது. இதனால் இரு நாடுகளிடையே போர் மூளும் என்கிற பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதனிடையே ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளைத் தேடி கண்டுபிடித்து அழித்தொழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு அவர்களது வீடுகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டும் வருகின்றன.
மேலும் அனந்தநாக் உள்ளிட்ட பல பகுதிகளில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல்லாக பதுங்கி இருந்த 200க்கும் மேர்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பஹல்காம் கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ20 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் வீடு வீடாக பயங்கரவாதிகளை தேடி கண்டறியும் நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் மும்முரமாக தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதனிடையே ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டசபை சிறப்புக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த சட்டசபை கூட்டத்தில், பஹல்காம் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் சட்டசபையை கூட்டுவதற்கான உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications