கிரிக்கெட் என்றால் டெண்டுல்கர், டெண்டுல்கர் என்றால் கிரிக்கெட்: கர்நாடக முதல்வர் புகழாரம்
கர்நாடக மாநில சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் பெல்காமில் இன்று துவங்கியது. இந்த கூட்டத்தில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரபல விஞ்ஞானி சி.என். ஆர். ராவ் ஆகியோர் பற்றி பெருமையாக பேசினார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
கிரிக்கெட் என்றால் டெண்டுல்கர், டெண்டுல்கர் என்றால் கிரிக்கெட். 24 ஆண்டு காலமாக கிரிக்கெட் விளையாடிய ஒரே வீரர் டெண்டுல்கர் மட்டும் தான். அவர் பல சாதனைகள் புரிந்துள்ளனர். அதை முறியடிப்பது கடினம். அவர் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்கள் அடித்துள்ளார்.
நான் கிரிக்கெட் விளையாடியது இல்லை. ஆனால் பிறர் விளையாடுவதை பார்த்திருக்கிறேன். டெண்டுல்கர் எப்பொழுது பேட்டிங் செய்தாலும் அதை பார்த்திருக்கிறேன். நம் நாட்டுக்கு அதிலும் குறிப்பாக கர்நாடகாவுக்கு பெருமை தேடித் தந்த விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் பாரத ரத்னா விருது பெறத் தகுதியானவர் என்றார்.