"கிரிமினல்களுக்கு நாடாளுமன்றத்தில் இடமில்லை, சிறைக்கு போங்கள்"- எம்.பிக்களுக்கு மோடி எச்சரிக்கை
டெல்லி: கிரிமினல்களுக்கு நாடாளுமன்றத்தில் இடமில்லை, சிறைச்சாலையில்தான் உள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் நேற்று அவர் பேசுகையில், "கிரிமினல் பின்புலம் உள்ளவர்கள்தான் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல முடிகிறது என்ற பேச்சுக்கள் நாடு முழுவதும் கேட்கின்றன. மக்கள் பிரதிநிதிகள் மீது மக்கள் மனதில் பதிந்துள்ள பிம்பம் இப்படித்தான் உள்ளது. எனவே குற்றப்பின்னணி உள்ளவர்கள் சிறைக்குத்தான் செல்ல வேண்டுமே தவிர நாடாளுமன்றத்துக்கு வரக்கூடாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சுத்தப்படுத்துவது நமது கடமையாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை ஒராண்டுக்குள் விசாரித்து முடித்து அவர்களை பற்றிய முழுமையாக பிம்பத்தை வெளிக்கொண்டுவர உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கலாம். தவறு செய்தவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஜெயிலுக்கு போகட்டும். தவறு செய்யவில்லை என்று நிரூபணமானால் அவர்கள் கவுரவத்துடன் சமூகத்தின் முன்பு தலை நிமிர்ந்து நிற்கட்டும்". இவ்வாறு மோடி பேசியபோது ராஜ்யசபா உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பை தெரிவித்தனர்.
நடப்பு நாடாளுமன்றத்தில் மொத்தம் 186 மக்களவை எம்.பிக்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது மொத்த உறுப்பினர்களில் 34 சதவீதமாகும். இதில் மிக தீவிர குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் 21 சதவீதமாகும். கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளான 9 எம்.பிக்களில் 4பேர், பாஜகவை சேர்ந்தவர்கள். கொலை முயற்சி வழக்கில் சிக்கியுள்ள, 17 எம்.பிக்களில் 10 பேர் பாஜகவை சேர்ந்தவர்களாகும். கடந்த நாடாளுமன்றத்தில் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்.பிக்கள் 158 பேர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.