மகா கும்பமேளா...கங்கை கரையில் ஒரே நேரத்தில் கூடிய பல ஆயிரம் மக்கள்.. காற்றில் பறந்த கொரோனா விதிகள்
டேராடூன்: கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், கங்கை நதிக்கரையில் மகா கும்பமேளாவை முன்னிட்டு ஆயிரக் கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஒன்றுகூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகப் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பல்வேறு மாநிலங்களிலும் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்குப் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மகா கும்பமேளா
உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் பகுதியில் அமைந்துள்ள கங்கைக் கரையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்துக்களின் புனித விழாவான கும்பமேளா நடத்தப்படுவது வழக்கம். இருப்பினும், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மகா கும்பமேளா நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவியது, இருப்பினும், உரியப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி கும்பமேளா நிகழ்ச்சியை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள்
கும்பேளாவை முன்னிட்டு நேற்று ஹரித்துவார் பகுதியில் அதிகளவிலான மக்கள் குவிந்தனர். புனித நீராட ஆயிரக் கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கங்கைக் கரையில் திரண்டார். அங்குக் குடியிருந்த பெரும்பாலான மக்கள் மாஸ்க்குகளை அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற மத்திய அரசின் கொரோனா நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை.

சவாலாக உள்ளது
இது குறித்து கும்பமேளா ஐ.ஜி. சஞ்சய் குன்ஜியால் கூறுகையில், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் கூட்டம் அதிகமாக உள்ளதால், மக்களை கொரோனா விதிகளைக் கடைப்பிடிக்க வைப்பதில் எங்களுக்குச் சவால் ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என அவர் கூறினார்.

கொரோனா விதிகள்
பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் கும்பமேளா நான்கு மாதங்கள் வரை நடத்தப்படும். இருப்பினும், இந்த முறை கொரோனா பரவல் காரணமாக ஒரு மாதம் மட்டுமே கும்பமேளா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், கும்பமேளாவில் கலந்துகொள்பவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழை நிச்சயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. கங்கைக் கரையில் புனித நீராடும்போது உரிய முறையில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications