பி.எஸ்.எப். ஜவானை அடுத்து அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட சி.ஆர்.பி.எப். கான்ஸ்டபிள்
டெல்லி: எல்லை பாதுகாப்பு படை வீரரை அடுத்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த தேஜ் பகதூர் யாதவ் எல்லையில் வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக பிரதமர் மோடியிடம் தெரிவிக்க ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டார்.
அந்த பரபரப்பு அடங்கும் முன்பு மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த கான்ஸ்டபிள் ஜீத் சிங் வீடியோ ஒன்றை யூடியூபில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
பிரதமர் மோடியிடம் தகவல் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை விட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கிறது. எங்களுக்கு விடுப்பு இல்லை வேறு எந்த சலுகைகளும் இல்லை.
ராணுவத்திற்கும் எங்கள் படைக்கும் இடையே அவ்வளவு வித்தியாசம். அவர்களை போன்று எங்களுக்கு பென்ஷன் இல்லை, வேறு எதுவும் இல்லை. 20 ஆண்டுகள் கழித்து தான் படையை விட்டு சென்றால் எனக்கு என்ன கிடைக்கும்?
முன்னாள் வீரர் கோட்டாவோ, கேன்டீனோ இல்லை. எங்கள் வேலைப்பளு எங்களை பாடாய் படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.