மணிப்பூரில் மீண்டும் வன்முறை.. அமைச்சர்களின் வீடுகள் சூறை.. ஊரடங்கு அமல் + இண்டர்நெட் துண்டிப்பு
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஜிரிபம் மாவட்டத்தில் மாயமான 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு மீண்டும் அங்கு வன்முறை வெடித்துள்ளது. இதனால் மணிப்பூரில் ஊரடங்கு மற்றும் இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இந்த மாநிலத்தில் அதிகளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களிடையே பிரச்சனை உள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் மணிப்பூரில் இரு இனக்குழுக்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. வன்முறை வெடித்தது.

இதையடுத்து மணிப்பூரில் பலர் கொல்லப்பட்டனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு வன்முறை குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கை நோக்கி திரும்பினர். ஆனாலும் கூட மணிப்பூர் முழுவதும் இன்னும் இயல்பு வாழ்க்கை என்பது திரும்பவில்லை. சில இடங்களில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் மாவட்டத்தில் மாயமான 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்கள் 6 பேரும் மைத்தேயி இனத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களை குக்கி இனத்தவர்கள் கடத்தி பணயக்கைதிகளாக வைத்து கொலை செய்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இதனால் இறந்த 6 பேருக்கும் நீதி கேட்டு மைத்தேயி மக்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். மணிப்பூர் தலைநகரான இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மைத்தேயி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டயர்களை அவர்கள் எரித்தனர். அதோடு எம்எல்ஏ, அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தினர். சிலர் வீடுகளை சேதப்படுத்தினர். இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
இந்த பதற்றம் காரணமாக மணிப்பூர் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவலாம் என்பதால் 7 நாட்கள் இண்டர்நெட் சேவை என்பது துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பகுதிகளில் மக்கள் தங்களுக்கான பொருட்களை வாங்கும் வகையில் மட்டும் காலை 5 மணி முதல் 8 மணி வரை ஊரடங்கு என்பது விலக்கி கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இம்பால் மேற்கு மாவட்ட மாஜிஸ்திரேட் கிரண்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக மாவட்டத்தில் இன்று 4.30 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படத்தப்படுகிறது. சுகாதாரம், மின்சாரம், பெட்ரோல் பம்ப், உள்ளாட்சி துறைகள், மீடியா, எலக்ட்ரானிக் மீடியா, நீதிமன்ற பணியாளர்கள், விமான பயணம் மேற்கொள்பவர்கள், விமான நிலையத்தில் பணியாற்றுவபர்களுக்கு மட்டும் இந்த ஊரடங்கில் இருந்து விலக்குஅளிக்கப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications