205 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும்... பயம் காட்டுகிறது ஃபானி புயல்
டெல்லி: ஒடிசா மாநிலத்தின் பூரி நகரின் தென்பகுதியை, ஃபானி புயல் தாக்கும் என, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கோபால்பூர் மற்றும் சந்த்பாலி, கடற்கரையோரம் வருகிற 3 ஆம்தேதி, அதாவது வெள்ளிக்கிழமையன்று, இந்த புயல் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில், சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.

புயல் சென்னையை கடந்து செல்லும் போது இன்றும், நாளையும் கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும் கடலோரப் பகுதியில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு தீவிரப்புயல் வங்கக் கடலில் நகர்ந்து செல்வதை அடுத்து, தமிழக கடலோரப் பகுதியில் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதையடுத்து, தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று திருத்தணியில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது.
அதே நேரத்தில் தமிழகத்தில் சில இடங்களிலில், மழையும் பெய்தது. குறிப்பாக பொன்னேரியில் 80 மிமீ மழை பெய்தது. கன்னியாகுமரி 40மிமீ, மதுரை விமான நிலையம் 20மிமீ, சோழவந்தான், குளித்துறை, பெரியாறு, உதகமண்டலம் 10 மிமீ மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications