என்ன திமிர்! கிரிக்கெட் பந்தை தொட்டதால்.. தலித் இளைஞர் விரலை துண்டித்த கொடூரம்.. குஜராத்தில் ஷாக்
பாட்னா: குஜராத் மாநிலத்தில் கிரிக்கெட் பந்தை தொட்டதால் தலித் இளைஞர் ஒருவரின் கை விரல் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் தீண்டாமை என்பது தண்டனைக்குரிய குற்றமாகவே இருந்து வருகிறது. இருப்பினும், நாட்டில் இன்னுமே பல இடங்களில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.
இதனால் சில இடங்களில் மோசமான வன்முறைச் சம்பவங்களும் கூட ஏற்படுகிறது. சாதி ஆணவத்தால் சில செய்யும் செயல்கள் நமது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் இப்போது குஜராத் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. ஜாதிய ஆணவத்தால் இளைஞர்கள் செய்த காரியம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதாவது குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த கிரிக்கெட் போட்டியில் கிராமத்தில் இருந்து பலரும் பங்கேற்றுள்ளனர்.
அப்போது அங்கே ஆர்வமாக கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் அந்த பந்தை ஒடி வந்து எடுத்துள்ளான். சிறுவன் பந்தை எடுத்ததால் ஆத்திரமடைந்த சிலர் அந்த சிறுவனைச் சுற்றி வளைத்து மிரட்டியுள்ளனர். திடீரென இத்தனை பேர் சுற்றி வளைத்து மிரட்டியதால் அந்த சிறுவன் ஒரு நிமிடம் அதிர்ந்து போய்விட்டான். குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள ககோஷி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த சிறுவனைக் கீழ்த்தரமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் மிரட்டியுள்ளனர். மேலும், சாதியை குறிப்பிட்டும் வசைபாடியுள்ளனர். இதனால் அந்த சிறுவன் பயந்தே விட்டான். அப்போது அங்கே இருந்த சிறுவனின் மாமா தீரஜ் பர்மர் என்பவர் சாதியை குறிப்பிட்டுப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பிரச்சினையை அப்போது அப்படியே முடிந்துவிட்டது.
இருப்பினும், அன்று மாலையே சாதிய ஆணவத்தால் இளைஞர்கள் 7 பேர் பயங்கர ஆயுதங்களுடன் தீராஜ் மற்றும் அவரது சகோதரர் கீர்த்தி ஆகியோரை தாக்கியுள்ளனர். அத்துடன் நிற்காமல் அவர்களில் ஒருவர் கீர்த்தியின் கட்டை விரலைத் துண்டித்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தீராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இப்போது தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications