‘ஸ்கைப்’வீடியோ சேட்டிங் மூலம் மருமகன் திருமணத்தில் பங்கேற்கும் தாவூத்?
மும்பை: மும்பையில் நடைபெற உள்ள தனது மருமகன் திருமண விழாவில் நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் 'ஸ்கைப்' வழியாக பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலியாகினர். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசித்து வருகிறார்.
ஆனால் இதை பாகிஸ்தான் அரசு 23 ஆண்டுகளாக மறுத்து வருகிறது. இதுகுறித்து இந்திய அரசு சார்பில் பல்வேறு ஆதாரங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், அங்கு இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில், தாவூத் இப்ராகிமின் மருமகன், அதாவது சகோதரியின் மகன் அலிஷாவின் திருமணத்தில் தாவூத் பங்கேற்கலாம் என தெரிகிறது. அலிஷாவுக்கும், மும்பை தொழிலதிபர் மகள் ஆயிஷாவுக்கும் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் நாளை திருமணம் நடைபெறுகிறது.
இதில் தாவூத் இப்ராகிம், ஸ்கைப் (வீடியோ சாட்டிங்) வழியாக பங்கேற்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த திருமண நிகழ்ச்சியை போலீசார் உன்னிப்பாக கண்காணிக்கத் தொடங்கி உள்ளனர்.
எதிர் கோஷ்டியினர் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் திருமண ஏற்பாடுகள் முழுவதையும் காவல்துறை தீவிரமாக கண்காணிக்கும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.