திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரி கேன்டீனில் விற்கப்பட்ட ‘பாம்பு பட்டாணிக்கறி’
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை கேண்டீனில் விற்கப்பட்ட உணவுப் பொட்டலத்தில் இறந்த பாம்புக்குட்டி ஒன்று கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் நலமில்லாத தன் மகனைச் சிக்கிச்சைக்காகச் சேர்த்திருந்த பெண்மணி ஒருவர் அங்குள்ள கேண்டீனில் உணவு வாங்கச் சென்றார்.
அந்தக் கேண்டீனில் விற்கப்பட்ட பச்சைப்பட்டாணி கறி பாக்கெட்டை வாங்கியுள்ளார் அவர். சாப்பிட நினைத்து திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. உள்ளே ஒரு குட்டி பாம்பு செத்த நிலையில் கிடந்துள்ளது.
உணவில் பாம்புக்குட்டி கிடந்தது தொடர்பாக அவர் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அதற்குள் தகவலறிந்த மற்ற நோயாளிகளின் உறவினர்கள் கேண்டீன் முன்பாகக் கூடி போராட்டத்தில் குதித்தனர்.
ஆஸ்பத்திரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்ளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்பந்தப்பட்ட உணவு விடுதி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
பின்னர், உடனடியாக சம்பந்தப்பட்ட கேண்டீன் மூடப்பட்டது. செத்த பாம்புக்குட்டி இருந்த உணவு மாதிரி சோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டது.












Click it and Unblock the Notifications