ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்த காது கேளாத, வாய் பேச முடியாத குஜராத் பிச்சைக்காரர்
அகமதாபாத்: காது கேட்க, வாய் பேச முடியாத பிச்சைக்காரர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்காக உளவு பார்த்தது குஜராத் மற்றும் பஞ்சாப் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் அஸ்லாம் பதான். காது கேட்க, வாய் பேச முடியாத அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ராஜ்ஜோட்டில் பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி அவர் பஞ்சாப் மாநிலம் அம்பாலாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை செய்ததில் அவருக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. பதானிடம் இருந்து பைனாகுலர், செல்போன், குஜராத்தில் உள்ள விமானப்படை தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களின் வரைபடம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பதான் அகமதாபாத்தில் உள்ள ஐஎஸ்ஐ உளவாளிக்கு தகவல் அளித்து வந்துள்ளார். அவர் எப்படி ராஜ்கோட்டில் இருந்து அம்பாலா வந்தார் என்பது போலீசாருக்கு குழப்பமாக உள்ளது. பதானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போனில் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்களின் எண்கள் உள்ளன.
அந்த எண்கள் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத்தில் கடை வைத்துள்ளவர்களின் எண்கள். பதானிடம் விசாரணை நடத்த குஜராத்தைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு பிரிவு படையினர் பஞ்சாப் சென்றுள்ளனர்.
காது கேட்க, வாய் பேச முடியாத பிச்சைக்காரரை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்று ஐஎஸ்ஐ நினைத்துள்ளது.












Click it and Unblock the Notifications