பலாத்காரம் செய்தால் இனி மரண தண்டனை.. மேற்கு வங்கத்தில் நிறைவேறிய சட்டம்.. சொன்னதை செய்த மம்தா
கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மொத்த நாட்டையைம் உலுக்கியது. இந்நிலையில் தான் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையிலான ‛அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் திருத்த மசோதா' மேற்கு வங்க சட்டசபையில் இன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது நிரம்பிய பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் 9 ம் தேதி நடந்தது. அவரது உடல் மருத்துவமனையில் உள்ள செமினார் ஹாலில் கிடந்தது. உடலில் காயங்கள் இருந்தன. இந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது.

பெண் டாக்டர் கொலையை கண்டித்தும், மருத்துவ பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் கடந்த 17 ம் தேதி நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கு கொல்கத்தா போலீசார் விசாரணை நடத்தி சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர். தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் என்பது மேற்கு வங்க மாநிலத்தை ஆட்சி செய்யும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் மம்தா பானர்ஜி குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்கிறார். ஆதாரங்களை அழிக்க நினைக்கிறார். இதனால் மம்தா பானர்ஜி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். அதேவேளையில் மாநிலத்தில் பலாத்கார குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார். அதன்படி இந்த புதிய சட்டத்திருத்த மசோதாவுக்காக 2 நாள் சட்டசபை சிறப்பு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இன்று சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியதும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ‛அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் மசோதா (மேற்கு வங்க குற்றவியல் சட்டங்கள் மற்றும் திருத்தம்) என்ற பெயரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி பலாத்கார குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது.
அதன்படி பலாத்காரம் செய்து பெண்ணை கொல்வது அல்லது கோமா நிலைக்கு தள்ளும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட உள்ளது. அதேபோல் பாலியல் பலாத்காரம், கூட்டு பலாத்காரம் செய்யும் நபர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை என்பது வழங்கப்படும். ஒருமுறை பாலியல் வழக்கில் சிக்கும் நபர் மீண்டும் அதே மாதிரியான குற்றத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கப்பட உள்ளது. இந்த மசோதா சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது.
இந்த மசோதாவுக்கு இனி ஆளுநர் ஆனந்த் போஸ் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் சட்டமாக்கப்படும். அதன்பிறகு மேற்கு வங்க மாநிலத்தில் பலாத்கார குற்றவாளிகளுக்கு இனி மரண தண்டனை வழங்கப்பட உள்ளது. இந்த சட்டத்திருத்த மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொள்ள எதிர்க்கட்சி தலைவர் (பாஜக) சுவேந்து அதிகாரி பரிந்துரைகளை வழங்கினார். ஆனால் அந்த பரிந்துரைகளை ஆளும் அரசு ஏற்கவில்லை.
இதுதவிர இந்த மசோதாவின்படி மாநிலத்தில் ‛அபராஜிதா டாஸ்க் போர்ஸ்’ என்ற பெயரில் போலீசில் புதிய பிரிவு உருவாக்கப்படும். இந்த பிரிவு பலாத்காரம் தொடர்பான வழக்குகளை விசாரித்து குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை பெற்று கொடுப்பதற்கான பணியை மேற்கொள்ள உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications