பிரதமர் மோடியின் யு.எஸ். பயணத்திற்கான மாற்று விமானத்தில் செயலிழந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா பயணத்திற்காக பயன்படுத்தப்பட இருந்த மாற்று விமானத்தில் செயலிழந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 25ந் தேதி 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். அப்போது மும்பை-ஐதராபாத்-ஜெட்டா நகரங்களுக்கு இயக்கப்பட்ட விமானத்தை மாற்று விமானமாக பயன்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டு அதன் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடி நாடு திரும்பிவிட்டார். இதனால் அவரது பயன்பாட்டுக்காக நிறுத்தப்பட்ட ஏர் இந்தியா மாற்று விமானம் மீண்டும் தனது சேவைகளை வழக்கம் போல தொடங்கியது.
ஜெட்டாவுக்கு நேற்று இரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு இந்த ஏர்-இந்தியா போயிங் 747-700 ஜம்போ விமானம் சென்றது. அப்போது ஏர் இந்தியா குழுவினரால் நேற்று இரவு செயலிழந்த நிலையிலான 'கிரேனைட்" வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விமானம் ஜெட்டாவில் தரையிறங்கியதும் உடனடியாக இது தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனைக்கு பின்னர் விமானத்தை விடுவித்தனர்.
தற்போது அந்த விமானம் ஜெட்டாவில் இந்திய அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் "விமானத்தில் சர்ச்சைக்குரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக" ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications