அந்த ஒரு தோல்வி.. கலங்கி நிற்காமல் களமிறங்கி அடித்து ஆடிய அரவிந்த்.. பாஜக வீழ்ந்தது இப்படித்தான்!
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறது.
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறது. சென்ற தேர்தலுக்கு இணையான வெற்றியை அங்கு ஆம் ஆத்மி பெற வாய்ப்புள்ளது. அங்கு ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு அக்கட்சி தன்னை தானே சுயபரிசோதனை செய்து கொண்டதுதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடந்து வருகிறது. தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 63 இடங்களில் முன்னிலை, பாஜக 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கிட்டத்தட்ட இது சென்ற தேர்தலுக்கு இணையான வெற்றியாகும். இதனால் டெல்லி ஆம் ஆத்மி அலுவலகம் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

எப்படி இருக்கிறது
சென்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 63 இடங்களை வென்றது. இந்த தேர்தலில் அதே அளவு இடங்களை ஆம் ஆத்மி நெருங்கி வருகிறது, தற்போது 63 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மீதம் உள்ள ஐந்து தொகுதிகளில் ஆம் ஆத்மி 500 வாக்குகள், 1000 வாக்குகள் என்று சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கிறது. இங்கு மிகவும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

லோக்சபா தோல்வி
ஆம் ஆத்மி இந்த சட்டசபை தேர்தலில் மிகவும் கவனமாக போட்டியிட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் லோக்சபா தேர்தலில் அந்த கட்சி அடைந்த தோல்வி. லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஒரு எம்பியை கூட பெறவில்லை. மிகப்பெரிய அளவில் வாக்கு வங்கி இருந்தும், ஆட்சியே கையில் இருந்தும், ஆம் ஆத்மி கட்சியால் எம்பி பதவியை பெற முடியவில்லை. இந்த தோல்வி ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய பாடம் கற்றுக் கொடுத்தது.

எங்கே தவறு
ஆம் ஆத்மி தான் எங்கே தவறு செய்கிறோம் என்று சுயபரிசோதனை செய்து கொண்டது. பாஜக எப்படி வென்றது, பாஜகவின் வலையில் நாம் எப்படி விழுந்தோம் என்று சுதாரித்துக் கொண்டது. முக்கியமாக பாஜகவின் பிரச்சாரம்தான் டெல்லியில் லோக்சபா தேர்தலில் அந்த கட்சியின் வெற்றிக்கு வழி வகுத்தது. இதனால் பாஜகவின் பிரச்சாரம் போலவே மிகவும் அதிரடியாக ஆம் ஆத்மி சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் செய்தது. ஆம் ஆத்மியின் அதிரடி பிரச்சாரம் பாஜகவை பல இடங்களில் நிதானம் இழக்க வைத்தது.

காங்கிரசை தவிர்த்தார்
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி வைக்க முயன்றது. எப்படியாவது கூட்டணி வைக்க முடியுமா என்று ஆம் ஆத்மி தீவிரமாக முயன்று வந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி இதற்கு ஒத்துழைக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் உடன் இணைய முயன்றது , ஆம் ஆத்மி கட்சிக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுத்தது. தற்போது சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மீது கவனம் செலுத்தாமல், தனித்து தைரியமாக நின்று வென்றுள்ளது.

சிஏஏ எப்படி
அதேபோல் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை ஆம் ஆத்மி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் பலரின் வாக்குகளை இழக்க நேரிடும். ஆதரவு தெரிவித்தாலும் பலரின் வாக்குகளை இழக்க நேரிடும். இதனால் அவ்வப்போது ஆதரவு தெரிவிப்பது போல ஆதரவும், எதிர்ப்பு தெரிவிப்பது போல எதிர்ப்பும் அக்கட்சி தெரிவித்தது. அதாவது தென்னை மர சின்னத்தில் ஒரு குத்து, பனை மர சின்னத்தில் ஒரு குத்து!

வளர்ச்சி முக்கியம்
அதேபோல் மிக முக்கியமாக ஆம் ஆத்மி வேறு எதை பற்றியும் பேசாமல், நேரடியாக தாங்கள் செய்த நல்லதிட்டங்களை பற்றி மட்டுமே பேசியது. பெரிய அளவில் பாஜகவை அக்கட்சி எதிர்க்கவில்லை. அதேபோல் மோடியை பெரிய அளவில் ஆம் ஆத்மி விமர்சிக்கவில்லை. இதில் மட்டும் ஆம் ஆத்மி கவனமாக இருந்தது. தாங்கள் செய்த நலத்திட்டங்கள், வளர்ச்சி பணிகள் என்று அது தொடர்பாக மட்டுமே ஆம் ஆத்மி பேசி வந்தது. இது அக்கட்சிக்கு பெரிய அளவில் பலன் அளித்தது.

பாஜகவே சிக்கியது
இதெல்லாம் போக சில இடங்களில் பாஜகவே தானாக முன்வந்து ஆம் ஆத்மி விரித்த வலையில் விழுந்தது. டெல்லியில் பிரச்சாரம் செய்த மனோஜ் திவாரி தொடங்கி உபி முதல்வர் ஆதித்யநாத் வரை சர்ச்சையாக பேசினார்கள். துப்பாக்கியால் சிஏஏ போராட்டக்காரர்களை சுட வேண்டும் என்று கடுமையாக பிரச்சாரம் செய்தனர். இதெல்லாம் பாஜகவிற்கு பின்னடைவாக மாறியது. இது உத்தர பிரதேசம் இல்லை டெல்லி என்பதை அக்கட்சி மறந்துவிட்டது. இதை கெஜ்ரிவாலும் பயன்படுத்திக் கொண்டார்.












Click it and Unblock the Notifications