டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! நாளை மறுநாள் வாக்குப் பதிவு!!
டெல்லி: டெல்லியில் சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வடைந்தது. நாளை மறுநாள் டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
டெல்லியில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 28 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி அமைத்தது. முதல்வர் பதவி ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால் 49 நாட்களில் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கடந்த மாதம் ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டு தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியானது.
மொத்தம் உள்ள 70 சட்டசபை தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 10ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இந்த முறை எப்படியும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று நோக்கத்துடன் ஆம் ஆத்மியும், பாஜவும் களம் இறங்கியுள்ளன. அங்கீகாரம் பெறாத காலனிகளை முறைப்படுத்துவது, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளை மையமாக வைத்து ஆம் ஆத்மி ஏற்கனவே தனது பிரசாரத்தை தொடங்கியது.
கடந்தமுறை செய்த ராஜினாமா தவறை இம்முறை செய்யமாட்டேன் என்று கேஜ்ரிவால் சூறாவளி பிரசாரம் செய்தார்.
நிலையான ஆட்சி, வெளிப்படையான நிர்வாகம், வளர்ச்சி ஆகிய கோஷங்களை கையில் எடுத்து களம் இறங்கியுள்ளது பா.ஜ.க..
அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்த கிரண்பேடியை பாரதிய ஜனதா தனது வசம் ஈர்த்தது. கேஜ்ரிவாலுக்கு போட்டியாக கிரண்பேடியை முதல்வர் வேட்பாளர் என்றும் அறிவித்துள்ளது.
பாரதிய ஜனதா சார்பில் பிரதமர் மோடி பல்வேறு இடங்களிலும் பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் டெல்லிக்கு போதிய வளர்ச்சி பணிகளை செய்யமுடியவில்லை என்று குற்றம் சாட்டினார்.
ஆம் ஆத்மி குறித்து பேசும் போது ஜேஜ்ரிவால் 49 நாட்களில் ராஜினாமா செய்ததை சுட்டி காட்டி இந்தியாவின் தலைநகர் என்பதால் டெல்லியை ஆட்சி செய்ய அனுபவம் வாய்ந்த அரசியல் தலைமை தேவை என்று விமர்சித்தார்.
இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஹவாலா பணம் நன்கொடையாக பெறப்பட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
காங்கிரஸ் சார்பில் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, நடிகைகள் குஷ்பு, நக்மா உள்ளிட்டவர்களும் பிரசாரம் செய்தனர். தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது.
இன்றைய இறுதிநாளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அரவிந்த் கேஜ்ரிவால். ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ள நிலையில் வாக்குப் பதிவு முடிவடையும் வரை எந்த ஒரு கருத்து கணிப்பையும் வெளியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைப் பொறுத்தவரையில் பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்புகள் ஆம் ஆத்மிதான் ஆட்சியை அமைக்கும் என்று தெரிவித்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications