டெல்லி பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு: கொந்தளிக்கும் குற்றவாளிகளின் வக்கீல்

டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் மைனர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மீதமுள்ள 4 பேரில் பேருந்து டிரைவர் ராம் சிங் கடந்த மார்ச் மாதம் திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இதையடுத்து மீதமுள்ள நான்கு பேரான வினய் சர்மா, அக்ஷய் குமார், பவன் குப்தா மற்றும் முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை கேட்டதும் தங்கள் மகளுக்கு நீதி கிடைத்த மகிழ்ச்சியில் மாணவியின் பெற்றோர் கண்ணீர்வடித்தனர்.
அதே சமயம் தீர்ப்பை கேட்டு அந்த 4 குற்றவாளிகளும் அழுதனர்.
இந்நிலையில் இது குறித்து அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ஏ.பி. சிங் கூறுகையில்,
இந்த தீர்ப்பு நியாயமற்றது, பாராபட்சமானது. அரசியல் அதிகாரத்தின் தலையீட்டால் வழங்கப்பட்டது. பொய்மையே வெல்லும் என்பதற்கு இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டு. தண்டனை வழங்கப்பட்டவர்கள் அப்பாவிகள். சம்பவம் நடந்த அன்று அக்ஷய் குமார், வினய் சர்மா மற்றும் பவன் குப்தா ஆகியோர் அந்த இடத்திலேயே இல்லை. அக்ஷய் டெல்லியிலேயே இல்லை. முகேஷ் சம்பவ இடத்தில் இருந்திருந்தபோதும் எதுவும் செய்யவில்லை.
இந்த குற்றத்தை தாங்கள் தான் செய்தோம் என்று அவர்களை போலீசார் மிரட்டி ஒப்புக்கொள்ள வைத்துள்ளனர். அவர்கள் ஏழைகள் தானே. யாரும் கேட்க மாட்டார்கள் என்று போலீசார் இவ்வாறு செய்துள்ளனர்.
இன்று முதல் 2 மாதங்களுக்கு எந்த கற்பழிப்பு வழக்குகளும் பதிவாகாவிட்டால் நான் இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மாட்டேன். ஆனால் கற்பழிப்பு வழக்கு பதிவானால் நிச்சயம் மேல் முறையீடு செய்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications