டெல்லியில் வெட்கக்கேடு: 25 வயது பெண்ணை தாக்கி, பலாத்காரம் செய்த டாக்சி டிரைவர்
டெல்லி: டெல்லியில் 25 வயது பெண்ணை டாக்சி டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேற்கு டெல்லியில் உள்ள இந்தர்லோக் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் கடந்த 3 ஆண்டுகளாக குர்காவ்னில் உள்ள நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு வேலை முடிந்த பிறகு நண்பர்களுடன் சாப்பிட ஹோட்டலுக்கு சென்றார். அதன் பிறகு அவர்கள் அந்த பெண்ணை வசந்த் விஹாரில் இறக்கிவிட்டனர்.
அவர் இரவு 9.30 மணிக்கு அங்கிருந்து தனியார் டாக்சி மூலம் வீட்டுக்கு கிளம்பினார். டாக்சியை 44 வயதான கௌரவ் என்பவர் ஓட்டினார். அந்த பெண் டாக்சியிலேயே தூங்கிவிட்டார். கண் விழித்தபோது டாக்சி யாரும் இல்லா இடத்தில் நின்றதோடு டிரைவர் கௌரவ் தனது அருகில் அமர்ந்து சிலமிஷம் செய்தது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றும் முடியவில்லை.
கௌரவ் அப்பெண்ணை பலமுறை கன்னத்தில் அறைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அப்பெண்ணை வீட்டில் இறக்கிவிட்டு இதை போலீசாரிடம் தெரிவிக்கக் கூடாது என்று கூறி மிரட்யுள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த பெண் இரவு 10.30 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து புகார் தெரிவித்தார். மறுநாள் காலை அவர் சாராய் ரோஹிலா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். மேலும் டாக்சியின் நம்பர் பிளேட்டை தான் புகைப்படம் எடுத்ததையும் போலீசாரிடம் அளித்தார். அந்த டாக்சி எண் டிஎல் 1ஒய்டி 7910 என்பதாகும்.
அந்த பெண்ணின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கௌரவை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் கௌரவை மதுராவில் வைத்து இன்று கைது செய்துள்ளனர். மேலும் அவரின் டாக்சியையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.